Tuesday, April 1, 2008

பச்சோந்திகள்

“சேர் உங்களப் ப்ரின்ஷிப்பல் வரட்டாம்”
வகுப்பறையில் மும்முரமாய்ப் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது பீயோன் வந்து சொன்னான்.

“இந்த மனிஷனுக்கு ஒரு மண்ணும் தெரியாது.நேரம் காலம் தெரியாமல் கூப்பிடும்.இதுக்குத்தான் சொல்லுறது படிப்பிச்சு அனுபவம் உள்ளவன் ப்ரின்ஷிப்பலா வரோணுமெண்டு”

எனது முணுமுணுப்பின் அர்த்தம் முழுமையாக விளங்காத போதும் நான் ப்ரின்ஷிப்பலை பேசுகின்றேன் என்பது மாணவர்களுக்கு விளங்கியிருக்க வேண்டும்.அவர்கள் எல்லோரும் மௌனமாய் இருந்தார்கள்.

பீயோன் வழமை போலவே புன்சிரிப்புடன் தலையைக் குனிந்து கொண்டு சென்றான்.

‘இந்த றாஸ்கலை முதலில துலைக்க வேணும்.இவன்தான் எல்லாரையும் போட்டுக் குடுக்கிறது’
மனதுக்குள் கறுவிக் கொண்டே பின் தொடர்ந்தேன்.

“என்ன சேர்…எட்டரைக்குள்ள ரெலிபோன் வந்திட்டுது போல”
கன்ரினுக்குள் இருந்து கனகலிங்கம் மாஸ்டரின் குரல் கேட்டது.

‘கூப்பிட்டவுடன போகக் கூடாது.கொஞ்ச நேரம் பாத்துக் கொண்டிருக்கட்டும்‘ என்ற எண்ணத்துடன் நானும் கன்ரீனுக்குள் நுழைந்தேன்.

“பாருங்கோ சேர்.இரண்டாம் பாடம் இப்பதான் துடங்கினது.அதுக்குள்ள வரட்டாம்”
கனகலிங்கம் மாஸ்டரை மெதுவாகப் பேச்சுக்குள் இழுத்து விட முயன்றேன்.

“ஓம் தம்பி அனுபவம் இல்லாத ஆக்களைப் ப்ரின்ஷிப்பலாப் போட்டா இப்பிடித்தான் பள்ளிக் கூடம் நடக்கும்”
கனகலிங்கம் மாஸ்டரும் எனது கருத்தையே கொண்டிருப்பது எனக்குச் சற்று உற்சாகம் அளித்தது.

“முந்தி இருநத அதிபர் எவ்வளவு நல்லாப் பள்ளிக் கூடம் நடத்தினவர். இவனப் போட்டதில இருந்து தலயிடிதான்”
ஆத்திரத்தில் வார்த்தை தவறாக வந்ததும் சட்டென்று நிறுத்தி சுற்று முற்றும் பார்த்தேன்.கனகலிங்கம் மாஸ்டர் என் தோள்களைத் தட்டி

“கோபப் படாதையும் தம்பி.முந்தியெண்டா பத்துப் பதினஞ்சு வரியம் ரீச்சரா இருந்தாத்தான் உபஅதிவரா வந்து பேந்து அதிபரா வரலாம்.இப்ப SLEAS பாஸ் பண்ணினவுடன ப்ரின்ஷிப்பலாப் போடுறாங்கள்.அவங்களுக்கு ஒரு நாசமும் தெரியாது”
“ஓம் சேர் தமிழும், கிண்டுக்கல்ச்சரும் படிச்சுப் போட்டு அஞ்சாம் வகுப்பு ஸ்கொலஷிப் மாதிரி சோதின பாஸ் பண்ணினவுடன பெரியாக்களோ இவங்கள்”

“என்ன ப்ரின்ஷிப்பலப் பற்றிக் கத நடக்குது போல”
ஆதித்தியன் சேரும் கன்ரினுக்குள் வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டார்.

“ஓம் சேர்…இந்த மனிஷன் வந்தாப் பிறகு நடக்கிற சீர் கேடுகளைப் பற்றிக் கதச்சுக் கொண்டிருக்கிறம்”

“கண்ட கண்ட நேரத்தில எல்லாம் ஆள விட்டுக் கூப்பிடுறதால எங்கட படிப்பிப்பு வேலயெல்லே குழம்புது”

“இவர் மட்டுமில்லயாம் இந்த முறை SLEAS இல எடுபட்ட எல்லாரும் இப்பிடித்தான் துள்ளிக்குதிக்கிறாங்களாம்”

“ஏனாம் அப்பிடி?”

“ஒரு வேலயயும் பிற்போடக்கூடாது.உடனேயே செய்து முடிக்கோணும் எண்டு ரெயினிங்கில சொல்லிக் குடுத்தவயாம்”

“அப்ப O\L சோதின எடுக்கிற பிள்ளயளுக்கு முதலாம் தவணேலயே எல்லாத்தயும் படிப்பிச்சு விட்டாச் சரியோ”
ஏல்லோரும் வாய் விட்டுச் சிரிக்க ப்ரின்ஷிப்பலை மட்டம் தட்டி விட்ட திருப்தியுடன்

“அப்ப சரி நான் போய் என்னெண்டு கேட்டுக் கொண்டு வாறன்”
நான் அதிபரின் அலுவலக வாயிலை அடையவும் இரண்டாம் பாடம் முடிந்து பெல் அடிக்கிறது.

“குட் மோனிங் சேர்”

“குட் மோனிங்…..இருங்கோ”

“சேர் வரச் சொன்னனீங்களாம்”

“ஓம் சேர்.அடுத்த வருஷம் A\L எக்ஸ்சாம் எடுக்கிற பெடியளின்ர அலுவலா உங்களோட கதக்க வேணும்”

“என்ன சேர்? சோல்லுங்கோ?”

“தங்கட Batch எல்லாரும் சேர்ந்து ரூர் போகப் போகினமாம்.ஸ்ரூடன்ட் யூனியன் மூலமாப் பெமிஷன் கேட்டுக் கடிதம் எழுதியிருக்கினம்.இப்ப இருக்கிற நிலமேல இது அவசியமே சேர்”
கடிதத்தை என் முன்னால் தள்ளி வைத்தார்.நான் சிறிது நேரம் அமைதியாக இருந்தேன். ப்ரின்ஷிப்பலை எதிர்க்க இறைவனால் கொடுக்கப் பட்ட இந்த சந்தர்ப்பத்தை இழக்க நான் தயாராக இல்லை.

“கற்றல் புறச் செயற்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேணும் சேர்.தனியப் பிள்ளயளப் பூட்டி வச்சுக் கொண்டிருந்து படிப்பிச்சாக் காணாது”

“அது எனக்கும் தெரியும் சேர்.இப்ப கொஞ்சம் நாட்டு நிலம மோசமாக் கிடக்கு.குண்டு வெடிப்பு……..கிளைமோர் எண்டு…..பிள்ளயளின்ர பாதுகாப்ப பாக்கவெல்லே வேணும்”

“உப்பிடிப் பாத்தா நாங்கள் ஒண்டுமே செய்யேலாது.நாட்டுப் பிரச்சினையைப் பற்றி யோசிக்காமல் செய்ய வேண்டியதைச் செய்யத்தான் வேணும்”

“அது சரி சேர். இப்ப பிரச்சின கொஞ்சம் மோசமாவெல்லே கிடக்கு”

“உங்களோட என்னால உடன் படேலாது சேர்.பிரச்சினயெண்டு பாத்துப் படிக்காமல் விட்டிருந்தா நீங்கள் B.A பட்டதாரியாகவோ நான் Bsc சிறப்புப் பட்டதாரியாகவோ வந்திருக்கேலாது”
அதிபரை விட நான் Qualification கூடியவன் என்பதைப் பொருத்தமான சந்தர்ப்பத்தில் சுட்டிக் காட்டினேன்.

“அப்ப முடிவா என்ன சேர் சொல்லுறியள்?”

“பிள்ளயளின்ர உரிமேல அளவுக்கதிகமாத் தலயிடக் கூடாது சேர். ரூர் போக ஒழுங்கு படுத்திக் குடுக்கிறதுதான் நல்லது”

“சரி.இன்னும் நல்லா யோசிப்பம்.கடைசிப் பாடம் ஸ்ராப் மீற்றிங் வச்சுக் கதப்பம்”

நான் நேராக நூலகம் நோக்கிச் சென்றேன்.நான்கைந்து பேர் கைகளில் அன்றைய தினசரிப் பத்திரிகையை வைத்திருந்தபடி கதைத்துச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

“இஞ்ச பாருங்கோவன். செல்வராகவன் சேரும் லைஃப்ரரிக்கு வாறார்”

நான் லைஃப்ரரிக்கு செல்வது குறைவுதான்.பாடம் இல்லாத நேரத்தில் ஸ்ராஃப் றூமில் புத்தகமும் கையுமாக இருந்து விடுவேன்.அதிபரிடமிருந்து கிடைத்த தகவலையும் அதனை நான் எதிர்த்ததையம் மற்றவர்களிடம் சொல்லிவிட வேண்டும் என்ற ஆர்வக் கோளாறினால் லைஃப்ரரிக்கு சென்றேன்.

“தெரியுமோ சங்கதி? A\L பெடியள ரூர் போக விடாமல் மறிக்கப் போறாராம்”
“இவற்ற அட்டகாசம் தலக்கு மேல போகத் துவங்கிட்டுது.போன சரஸ்வதி பூசையையும் பெரிசாச் செய்ய விடாமல் மறிச்சுப் போட்டார்” – செல்வநாயகம் சேர்.
“அது பரவாயில்ல சேர். 'ரீச்சர் இண்டக்கு தேவாரம் பாடுங்கோ’ எண்டு என்னயெல்லே மாட்டிவிட்டுட்டார்.மாட்டன் எண்டு சொன்னதுக்கு ‘ரீச்சர்ஸ்தான் முன் மாதிரியா நடக்க வேணும்.அப்பதான் பிள்ளயள் பின்பற்றி நடக்கும்’ எண்டு உத்தரவெல்லே போட்டவர்” – வாசுகி ரீச்சர்
எனக்குஆதரவு அதிகரித்துச் சென்றது.

“இந்த முறை பெடியள ரூர் அனுப்பாமல் விடுறேல.நாங்களெல்லாரும் ஒண்டாச் சேந்து நிண்டா அவரால ஒண்டும் செய்யேலாது”
நான்காம் பாடம் முடிந்து பெல் அடிக்க கன்ரீன் நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

சுடச் சுட வடையும் கண்டித்தேயிலையில் சுந்தரம் போட்ட பால்த் தேநீருமாய் இன்றைய ஸ்ராஃப் மீற்றிங்கில் ஆசிரியர்கள் எல்லோரும் ஒருபக்கம் நின்று அதிபரை எதிர்ப்பதாகவும், பிள்ளைகளை எப்படியும் ரூர் போக அனுப்புவதாகவும் முடிவு செய்து கொண்டோம்.

ஏஞ்சிய மூன்று பாடங்களும் நகர்ந்து பிள்ளைகளை ஏழாம் பாடத்துடன் வீட்டுக்கு அனுப்பிய பின்னர் ஸ்ராஃப் மீற்றிங் தொடங்கியது.

“எல்லோருக்கும் வணக்கம்.ஒரு முக்கியமான விசயமாக கலந்தாலோசிப்பதற்காகத்தான் இந்த அவசர ஸ்ராஃப் மீற்றிங்.உங்கள் எல்லோருக்கும் விசயம் தெரிந்திருக்குமென நினைக்கின்றேன்”
என்னைப் பார்த்து விஷமமாகச் சிரித்தார்.நான் தெரியாதது மாதிரி வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தேன்.

“A\L ஸ்ருடென்ட்ஸ் ரூர் போவதற்கு பெமிஷன் கேட்கிறார்கள்.தற்போதய நாட்டுச் சூழ்நிலையில் ரூரிற்கு அனுமதியளிக்க முடியாது.உங்களுடய அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ளவே இந்த அவசர ஸ்ராஃப் மீற்றிங்”
அனைவரும் அமைதியாக இருக்க கனகலிங்கம் சேர் என் துடையில் கிள்ளினார்.

“மன்னிக்க வேணும் சேர்.கற்றல் செயற்பாடுகள் எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு கற்றல் புறச் செயற்பாடுகளும் முக்கியமானதுதான். Educational Tour என்பது எமது கல்வித்திட்டத்தில் அனுமதிக்கப் பட்ட விடயம்தான்”

“இப்ப பிரச்சினை அதில்ல. ரூர் செல்வதற்கு பொருத்தமான சூழ்நிலை இல்லை.பாதுகாப்புப் பிரச்சினைகள் இருக்கிறது”

“அப்பிடிப் பாத்தா உந்தப் பாதையால வந்து போறதும் பாதுகாப்பில்லைத்தான்.பிள்ளயள பள்ளிக்கூடம் வராமல் வீட்ட நிக்கச் சொல்லவெல்லோ வேணும்”
கனகலிங்கம் சேர் பொருத்தமான நேரத்தில் நெத்தியடி அடிக்க சிரிப்பொலி ஒருகணம் பரவி மறைந்தது.

“நீங்கள் ஒரு முடிவோடதான் வந்திருக்கிறியள் போலக்கிடக்கு.நான் மட்டும் என்ன செய்ய முடியும்.அப்ப ரூர் போகப் பெமிஷனைக் குடுப்பம்”
சாதித்து விட்ட திருப்தியில் நிமிர்ந்து அமர்ந்தேன்.

“ஆனால் சில விஷயங்களை ஒழுங்காகச் செய்ய வேணும்.இரண்டு ஜென்ஸ் ரீச்சரும் இரண்டு லேடிஸ் ரீச்சரும் கட்டாயம் போகவேணும்”
எங்கே நான் அகப்பட வேண்டி வரமோ என்ற அவசரத்தில் பேசத்தொடங்கினேன்.

“நாங்கள் கட்டாயம் போவம் சேர்.வாசுகி ரீச்சர்,செல்வராணி ரீச்சர்,ஆதித்தியன் சேர்,கனகலிங்கம் சேர் நாலு பேரும் போவினம் சேர்”

ஆதித்தியன் இளம் பட்டதாரி ஆசிரியர்.கனகலிங்கம் சேர் நாற்பது வயது தாண்டிய மனிஷன்.மனிஷியின் கரைச்சலில் இருந்து நாலு நாள் தப்பவதற்காக கட்டாயம் போகும்.வாசுகி இளம் பெட்டை.செல்வராணி ரீச்சர் போனாத்தான் பெடியளக் கட்டுப் படுத்தலாம்.பொருத்தமான நான்கு பேரை நான் முன்மொழிய அவர்களும் மௌனத்தால் தமது சம்மதத்தைத் தெரிவித்தார்கள்.

“அப்ப சரி.எல்லா ஒழுங்குகளையும் செய்து கொடுப்பம்.பிள்ளைகள் கவனமாப் போய் வந்தாச் சரி.இத்துடன் கூட்டத்தை நிறைவு செய்வோம்”
வாசுகி ரீச்சர் பாடசாலைக் கீதம் பாடி முடிந்ததும் எல்லோரும் கலைந்து சென்றோம்.

கனகலிங்கம் சேர் என் தோள்களில் கையைப் போட்டவாறு
“என்ன செல்வராகவன். நினச்சதச் சாதிச்சுப் போட்டியள்.பெடியளுக்காக நல்லாத்தான் கஷ்டப் படுறியள்”

“நீங்கள் ஒண்டு சேர்.பெடியளை அனுப்பி விட்டா நாலு நாளக்கு சும்மா இருக்கலாமெண்டுதான்”

கனலிங்கம் சேர் மௌனமாய் விலகிச் சென்றார்.மோட்டார் சைக்கிள் ஸ்ராண்டைத் தட்டும் போது ப்ரின்ஷிப்பல் யாருடனே ரெலிபோனில் கதைக்கும் சத்தம் தெளிவாகக் கேட்டது.

“ஓம் மச்சான்.இண்டக்கும் நல்ல அலுப்படிச்சுப் போட்டுத்தான் ரூர் போக அனுமதிச்சனான்.இல்லாட்டி எங்களப் பற்றி லேசா நினைச்சுப் போடுவாங்கள்”

(யாவும் கற்பனை)



பின்குறிப்பு : 27.01.2008 அன்று தினக்குரல் பத்திரிகையில் வெளியானது.

3 comments:

S.Lankeswaran said...

என்ன மிஸ்ரர் நிரேஸ்குமார் ரெக்னிக்கல் கொலேஜில் ரொம்ப பாதிக்கப்பட்டு உண்மைக் கதைகளை எழுதிருங்க போல.

Mahalingam Nireshkumar said...

Sorry Ilankes!
I'm little busy in my works these days. I'll come to the field again very soon.
Anyway thanks for your comment. And sorry for late.

Anonymous said...

Hai Ilankes;
I have come to the Japan for a training programe.I 'll come back to SriLanka on Dec 21 2008.I 'll conduct you latter.