Tuesday, August 25, 2009

அவர்கள் அப்படித்தான் !



அந்தச் செய்தி கிடைத்ததிலிருந்து அலுவலகம் முழுவதும் ஒரு பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

“சேர் எங்கட ஒபிசிலிருந்து எத்தின பேரச் செலக்ட் பண்ணியிருக்கிறாங்கள்?”
“பொறுங்கோ பாப்பம். கடிதம் ஏ.ஓற்றத்தான் கிடக்கு”

நான் மெதுவாக ஏ.ஓவின் அறையை எட்டிப் பார்த்தேன். மேசையின் மேல் கடிதம் படபடத்துக் கொண்டிருந்தது.

“என்ன செல்வம்? ஆராம் செலக்ட் பண்ணுப் பட்டது?”
“தெரியேல சேர்”

அவனிடமிருந்து ஒரு கதையை எடுப்பதை விட கல்லிலிருந்து நார் உரித்து விடலாம். உயர் அதிகாரிக்கு எக்ஷ்ரென்ஷன் கிடைத்ததிலிருந்து, சீ.சீயின் மகள் மூன்று மாதமாய் ‘சுகமில்லாமல்’ இருப்பது வரை அனைத்தையும் தெரிந்து கொண்டு எதுவுமே தெரியாத மாதிரி நடிப்பதில் அவனை மிஞ்ச வேறு யாராலும் முடியாது.

“இவனுக்குத் தான் பீயோன் எண்ட நினப்புக் கொஞ்சமும் இல்ல”
“சத்தம் போடாதயுங்கோ. பிறகு ஏ.ஓற்றப் போட்டுக் குடுத்திடுவான்”
“சந்திரிக்கா அம்மையார் 40000 பேருக்கு வேல குடுத்தாலும் குடுத்தார். அண்டயோட graduates இன்ர மதிப்பெல்லாம் போட்டுது”

பட்டதாரிகளுக்கான மதிப்பும் மரியாதையும் அலுவலகங்களில் குறைந்ததென்னவோ உண்மைதான். பல உயர் மட்ட அதிகாரிகளுக்கு இவர்களின் பதவிப் பெயர் கூடச் சரியாகத் தெரியாது.

- Graduate Trainee
- Graduate Assistance
- Assistance Graduates

இப்படி இல்லாத பெயர்களால் அவர்களைக் குறிப்பிட்ட போதும் தட்டித் தவறிக்கூட சரியான பதவிப் பெயரை அவர்கள் வாய் உச்சரிக்காததற்குக் காரணமும் இல்லாமல் இல்லை.

ஐம்பத்தேழு வயதைக் கடந்தும் கூட பிடித்த கதிரையை ‘மரப் பொந்தைப் பற்றிப் பிடித்த உடும்பைப் போல’ பிடித்துக் கொண்டிருப்பதால் ஏற்பட்ட மறதிக் குணத்தைத் தவிர வேறென்ன காரணத்தைச் சொல்ல முடியும்?

காலை நேரப் பிரசங்கம் முடிந்து கன்ரீனில் இருந்து ஏ.ஓ புறப்பட்டுவிட்டார்.
மணமேடையிலே மணமகளுக்காகக் காத்திருக்கும் மாப்பிள்ளைபோல, ஏ.ஓவின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தேன்.

லைப்ஃரரிக்குக் கிட்ட வந்த ஏ.ஓ ஐ திடீரென்று காணவில்லை. மர்மமாய் மறைந்து விட்டார். இந்நேரம் மனிஷன் அன்றைய தினசரிப் பத்திரிகைகளில் மூழ்கியிருப்பார். தலைப்புச் செய்தியில் தொடங்கி, மரண அறிவித்தல்களைத் தாண்டி, இப்பத்திரிகை எங்கே? எப்போது? யாரால்? அச்சிட்டு வெளியிடப்பட்டது என்பது வரை பார்த்து முடிக்க எப்படியும் பத்துமணி தாண்டும்.

அந்த அலுவலகத்தில் கடமை புரியும் அனேக உத்தியோகத்தர்கள் இலங்கை தொழிநுட்பக் கல்விச் சேவையைச் சேர்ந்தவர்கள். முகாமைத்துவ உதவியாளர்; சேவையை சேர்ந்த இரண்டு மூன்று பேரைத் தவிர, நான்கைந்து பட்டதாரிகள் கடமையாற்றுகின்றோம். எம்மை விட நான்கு காவலாளிகள், ஒரு பீயோன் இவ்வளவு பேரையும் சேர்த்து ஒரு இருபது பேரைத் தாண்டாது.

“இவளவு பேற்றயும் பேர்ஷனல் பயில மெயின்ரனன்ற் பண்ணுறது லேசான வேலயே?” என்று புறுபுறுக்கும் சப்ஜெக்ட் கிளார்க் ஒருபுறம்,

“பதினெட்டாம் தேதிக்குப் பிறகு ஒருத்தரும் எனக்குக கிட்ட வரக்கூடாது பேசிப் போடுவன்” எனும் எக்கவுண்ட்ஸ் கிளார்க் ஒருபுறம்,

“கிடக்கட்டும் பாப்பம்” என்று எப்போதும் ஒரே பதிலைச் சொல்லும் உயரதிகாரி ஒருபுறம்,

இவர்களுக்கிடையில் அகப்பட்டு கடமை புரிவதென்றால் அதற்கொரு தனி ரெயினிங் எடுக்க வேண்டும்.

ஒரே சம்பள நிலையில் எல்லாப் பட்டதாரிகளையும் வைப்பதற்காக பல்வேறு பதவிகள் உருவாக்கப்பட்டபோது எமக்கு “Training Assistant” என்று நாமகரணம் சூட்டப்பட்டது. எம்மையும் குறிப்பிட்ட சேவைக்குள் உள்ளீர்ப்புச் செய்வார்கள் என்பது நம்பிக்கையின் உச்சக் கட்டம்.

“ஆ…ஏ.ஓ சேர் வாறார்”
நான் சட்டென்று எழுந்து, அவர் என்னைக் கண்டு கொள்ளும் படியாக ‘சுவாமியின் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தன் போல’ நின்று கொண்டேன்.

“குட்மோனிங் சேர்”
“குட்மோனிங்”

கதிரையில் அமர்ந்ததும் கோவைகளில் மூழ்கி விடுகிறார். நான் அவரின் கடைக்கண் பார்வைக்காகக் காத்து நின்று, கால் கடுத்ததும், வராத இருமலை வரவழைத்து இருமினேன்.

“ஆங் என்ன சொல்லும்? முதலில கதிரேல இரும். பேந்து வெளீல போய் எங்கள மதிக்கிறாங்கள் இல்ல எண்டு சொல்லுவியள்”

நான் பௌவியமாக, பெண் பார்க்க வந்த இனந்தெரியாத கூட்டத்தின் நடுவே அமர்ந்திருக்கும் பொம்பிளை போல அமர்ந்திருந்தேன்.

“சேர் அந்த ரெயினிங்கிற்கு அப்பிளை பண்ணினனாங்கள். மற்ற டிஸ்ரிக்குகளில லிஸ்ற் வந்திட்டுதாம். அதுதான்…..”

“ஓமோம். ஒரு கடிதம் வந்ததுதான். அத சேரிட்டப் போட்டுட்டன்”
நான் சட்டென்று மேசையைப் பார்த்தேன். கடிதத்தைக் காணவில்லை.

“எதுக்கும் நீர் சேர் வந்தாப் பிறகு கதயும்”

பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு எப்படிப் பொய் சொல்கிறார்.அந்தக் கடிதத்திற்காகத்தான் நான் காவல் நிற்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டு ஒரு நொடிக்குள் அதனை மறைத்து விட்ட அவரின் ‘முன் அனுபவத்தை’ அந்த நேரத்தில் என்னால் வெளிப்படையாகப் பாராட்ட முடியாததற்காக இறைவனை நொந்து கொண்டேன்.

“அப்ப சரி சேர். நான் சேர் வந்தாப்பிறகு கதக்கிறன்”

மூன்று வருடங்கள் முடிவடைவதற்குள் அந்தப் பயிற்சி நெறியை நிறைவு செய்தால் சேவையில் உள்ளீர்ப்புச் செய்வதற்கான சாத்தியங்கள் மிக அதிகம். ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களே இப் பயிற்சி நெறியில் இணைத்துக் கொள்ளப் படுவார்கள். இந்த வருடம் ஓரிருவருக்காவது சந்தர்ப்பம் கிடைத்தால் அது நல்லதுதானே!

“சேர் வாறார்….சேர் வாறார்”
வெளிக்கேற்றில் சேரின் மோட்டார் சைக்கிள் வருவதைக் கண்டதும் எனது சக உத்தியோகத்தர் ஓடி வந்தார்.
“மச்சான் சேர் வந்தவுடன போய்க் கதப்பம். ஏ.ஓ தான் உதவாத மனிஷன். சேர் நல்லவர்”
“குட்மோனிங் சேர்”
“குட்மோனிங்”

சேர் தனது சீட்டில் இருக்க முன்னர், ஏ.ஓ எங்களை முந்திக் கொண்டு போய் சேருக்கு முன்னால் போடப் பட்ட கதிரையில் அமர்கின்றார். அவரின் கைகளில் சில கோவைகள் இருக்கின்றன.

இருவரும் ஏதேதோ விஷயங்களை டிஷ்கஸ் பண்ணுகிறார்கள்.

- சேரின் மகன் லண்டன் போய்ச் சேர்ந்தது.
- ஏ.ஓவின் மகளுக்குப் பிள்ளை பிறந்தது.
- சேரின் வயல் நன்றாக விளைந்தது.
போன்ற முக்கியமான விஷயங்கள் கடும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டன.

ஏ.ஓ எழுந்ததும், சேர் கன்ரீனுக்கு வெளிக்கிட முன்னம், நான் முந்திக் கொண்டேன்.
“எக்ஷ்கியூஸ் மீ சேர்”
அவர் நிமிர்ந்து ‘சொல்லும்’ என்பது போலப் பார்த்தார். நான் விடயத்தை ஒப்புவித்தேன்.

“அது தம்பி உவங்கள் உப்பிடித்தான். தங்கட ஆக்களின்ர வேலயெண்டா விழுந்தடிச்சுச் செய்வங்கள். எங்கட அலுவலத் திரும்பியும் பாக்கமாட்டான்கள்”

“இல்ல சேர் திருகோணமல, யாழ்ப்பாணம், மட்டக்களப்பில எல்லாம் தமிழாக்களயும் செலக்ட் பண்ணியிருக்குதாம்”

“எங்களுக்கின்னும் கடிதம் வரேல. வந்தாப் பிறகு பாப்பம்”
“இல்ல சேர் கடிதம் வந்ததாம்”

ஏ.ஓ கடிதத்தைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டுச் செல்கிறார். நான் ஆவலாக என் காதுகளைத் திறந்து வைத்திருக்கின்றேன்.

“சுந்தரமூர்த்திதான் செலக்ட் பண்ணுப் பட்டிருக்கிறார்”
“இது அநியாயம் சேர். அவர் ஏற்கனவே சேவிஷில இருக்கிறார்”
“விசர்க்கத கதயாதயும். நாங்களே தெரிவு செய்யுறது? டிப்பாட்மென்ற்தான் தெரிவு செய்யுறது”
“அது சரி சேர். மற்ற இடங்களில graduates ஐயும் தெரிவு செய்திருக்கினமாம்”
“அதுக்கு நாங்கள் ஒண்டும் செய்யேலாது. நீர் அடுத்த வருஷம் அப்பிளை பண்ணிப் பாரும்”

இந்தச் செய்தி ஒரு சிலரை திகைக்கச் செய்ய, சிலரை சந்தோஷப் படுத்தியது.

“இப்ப ரெயினிங்கிற்கு அவசரமில்ல. நான் நாப்பத்தஞ்சு வயதுக்குப் பிறகுதான் போனனான்”
“செல்வரட்ணம் போன வருஷம் கிடைச்சும் போகேலயெல்லே?”
“ஏனாம்?”
“மனிஷிக்கு முதுகுக் குத்தெண்டு ஆஸ்பத்திரிக்கு கூட்டிக் கொண்டு திரிஞ்சவர்”
“சுந்தரமுர்த்தி சேர் போறதும் சந்தேகம்தான்”
“ஓமோம் ….மனுஷனுக்கு யாழ்பாணம் போகாமல் இருக்கேலாது”
“பட்டதாரிப் பிள்ளயள் ஒருத்தருக்கும் கிடைக்கேலை பாவங்கள்”

இந்த சம்பாஷனைகளின் நடுவே பட்டதாரிப் பிள்ளைகளையும் இழுத்தது நக்கலுக்கா, நையாண்டிக்கா, அல்லது உண்மையான அக்கறையா தெரியவில்லை.

“தம்பி நீர் யோசியாதயும். அடுத்த வருஷமும் போகலாம்”

“உவங்கள் உப்பிடித்தான். தமிழற்ற அப்ளிகேஷன் எண்டதும் கிளிச்சுப் போட்டிருப்பாங்கள்”

“அதில்ல. இந்த ரெயினிங் முடிச்சா சேர்விஷில அப்சோ பண்ணுற சான்ஸ் கூடவாம்”

“உதெல்லாம் விஷர்க்கத. எல்லா இடத்திலயும் இன்புழுவென்ஷ்தான் வேல செய்யுது”

நான் எப்படியும் இந்த ரெயினிங்கிற்கு செல்வதென்று முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் இறங்கினேன். நல்லவேளையாக என் சிங்கள நண்பியொருத்தி அமைச்சில் வேலை செய்தாள்.

“ஹலோ ஹவுத கத்தாக்கறண்ணே?”
“மம செல்வராகவன். வவுனியா இந்தலா கத்தாக் கறண்ணே. விஜிதா இன்னவாத?”
“ஹோல்ட் ஒன்”
சில நிமிட மௌனத்தின் பின்,
“ஹலோ விஜிதா கியர்”
நான் அரைகுறைச் சிங்களத்தில்சொல்லி முடித்தேன்.
“செல்வா மங் செக்கறண்ணங். ஒயா விநாடி பகக் பஸ்ஸறட்ட ஹோல் கறணவாத?”
“போமஸ் துதி”
“எவ்வளவு?”
“இருநூறு ரூபா”

தொலைபேசிக் கட்டணத்தைக் கொடுத்து விட்டு ஜந்து நிமிடம்; கழித்து மீண்டும் போன் எடுத்தேன். எமது அப்ளிகேஷன் அமைச்சுக்கு போய்ச் சேரவில்லை என்ற செய்திதான் கிடைத்தது.

‘உவங்கள் உப்பிடித்தான். கிழிச்சுப் போட்டிருப்பாங்கள்’

ஏதோவோர் உள்ளுணவர்வால் உந்தப்பட்டு திணைக்களத்திற்கு கோல் எடுத்தேன்.

“ஹலோ மம செல்வராகவன். வவுனியா இந்தலா கத்தாக்கறண்ணே…..” விடயத்தை ஒப்புவித்ததும்,
“பொட்டக்கிண்ட. மங் செக்கறண்ணங்”

ஐந்து நிமிடம் கழித்து அந்த மேலதிகாரி எனக்குப் போன்பண்ணி எமது அப்ளிகேஷன் திணைக்களத்திற்கும் கிடைக்கவில்லையென்ற செய்தியைச் சொன்னார். நான் அவசரமாக சேரிடம் ஓடினேன்.

“சேர் எங்கட அப்ளிகேசன் டிபார்ட்மெண்ட்டிற்கு கிடக்கேலயாம்”

“ஓம் தம்பி. இஞ்ச வேல பிஸீல பொவேட் பண்ண மறந்திட்டன்”

நான் மெல்ல மெல்ல அதிர்ந்து போய் சிலையாக நின்றேன்.

(யாவும் கற்பனையே)

Monday, July 20, 2009

சதுரங்கம்

சிவா

“சிவா கண்டுக்குட்டி அவிட்டுப்போட்டுது.ஒருக்கா வந்து பிடியடா”
அடி வளவுக்க கிடக்கிற மாட்டுக்கொட்டில்ல இருந்து அம்மா கூப்பிடுறா.
“ஓமம்மா வந்திட்டன்”
நான் ஓடிப்போனன்.அம்மா சொம்பு நிறயப் பாலோட குந்திக்கொண்டிருந்து மாட்டின்ர மடியத் தட்டிக்கொண்டிருக்கிறா.கண்டுக்குட்டி அம்மான்ர முதுகுக்கு மேலால எட்டிப்பால் குடிக்கப் பாக்குது.
“ஏய்…ஏய்…இஞ்சால வா”
நான் கயித்தில பிடிச்சுக் கொற கொறவெண்டு இழுத்தந்து முருங்க மரத்தில கட்டினன்.

“எட சிவா.கோழிக்குஞ்சுக்கு விற்றமின் சீ எடுத்தர மறந்து போனன்.ஒருக்கா….”
செல்லமக்கா சொல்லி முடிக்க முதல் நான் பேணியத் திறந்து குளிசையை அள்ளிக்கொண்டு போய்க் குடுத்தன்.

“எட சிவா……சயிக்கிள் காத்துப்போச்சு. ரூசனுக்கு நேரம் போகுது. முன் வீட்டில போய்ப் பம்மை வேண்டிக்கொண்டு வாடா”
“சரியண்ண”
நான் பம்மைக் கொண்டந்து குடுக்கேக்கதான் ஐயா நித்திரயால எழும்புறார்.
“தம்பி இஞ்ச வா.உந்த நெருப்புப் பெட்டியை எடுத்துத்தாடா” எண்டுறார்.
“எனக்கு நேரம் போச்சுது”
“நான் உவன் சிவாவக் கேட்டனான்”
வீட்டில எல்லாருக்கும் என்னிலதான் நல்ல விருப்பம்.எல்லாரும் என்னட்டத்தான் வேல கேப்பினம்.

“சிவா சம்போ முடிஞ்சுதடா.மொட்டயன்ர கடக்குப் போய் வேண்டிக்கொண்டாறியே”
“நீ சும்மா இரடி புள்ள. பள்ளிக்கூடத்துக்கு நேரம் போப்போகுதெல்லே”
ஐயா அக்காவ உரப்புறார்.அக்காவப்பாக்கப் பாவமாக் கிடக்கு.நான் பொட்டுக்கால பூந்தோடிப்போய் வேண்டிக் கொண்டந்து குடுக்க அக்கா கெட்டிக்காறனெண்டு சொல்லுறா.

“சிவா இஞ்ச வாடா.இந்தா தேத்தண்ணி.குடிச்சிட்டு பாலுவயும் மீனாவயும் எழுப்பு”
மீனா சின்னத்தங்கச்சி. பேசாமல் எழும்புவள். பாலு அழுது குளறிக்கொண்டுதான் எழும்புவன். அவன எழுப்பத்தான் எனக்குச் சரியான பயம். வேணுமெண்டு காலாலயும் உதைவன்.

“சிவா பள்ளிக்கூட வான் வரப்போகுது”
ஐயா உரப்புறார்.நான் விறுவிறெண்டு எல்லா வேலயயும் செய்யுறன்.சாப்பாட்டுப் பெட்டீக்க இடியப்பத்தப் போட்டு மூடி,தண்ணிப் போத்திலயும் நிரப்புறன்.

“சிவா என்ர சப்பாத்தக் கண்டனியோடா”
கட்டிலுக்கு கீழ பூந்து சப்பாத்த எடுத்துப் பாலுவிட்டக் குடுக்கவும் வாசலில வான் கோணடிக்குது. புத்தக வாக்கயும் தண்ணிப் போத்திலயும் எடுத்துக்கொண்டோடுறன். பாலுவும் மீனாவும் வானுக்க ஏறிக் கதவ சாத்தினவுடன கண்ணாடீக்கால கையக் காட்டீனம். ஒருநாளும் இல்லாமல் இண்டக்கெனக்கு கண் எல்லாம் கலங்கிப் போச்சுது.

மீனாட்சி

எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.அண்டக்கு நவராத்திரி நாலாம் பூசை. அப்பூன்ர காலத்தில இருந்து நாலாம் பூச நாங்கள்தான் செய்யுறனாங்கள். நாலாம் பூசயெண்டா வேப்பங்குளத்துச் சனம் எல்லாம் நிறம்பி வழியும். புக்க,கடல,அவல்,மோதகம்,வட எண்டு அள்ளி அள்ளிக் குடுப்பம். அத வாங்குறதுக்கெண்டும் ஏழை எளியதுகள் கஷ்டப் பட்ட சனங்கள் எல்லாம் வாறதுமுண்டு.
பூசை முடிய இரவு பத்துப் பதினொரு மணியாகும். ஒவரு ஜனாதிபதியும் ஆட்சிக்கு வந்தோடண கொஞ்சக் காலத்துக்கு சண்டை சச்சரவு இல்லாமல் கிடக்கிறதும், சமாதானப் பேச்சு வார்த்தை நடக்கிறதும் வழமைதானே. அப்ப சந்திரிக்கா அம்மையார் ஆட்சிக்கு வந்த நேரம்.
சிறியன்ரி நவராத்திரிப்பாட்டு பாடிக்கொண்டிருக்கேக்க சின்னப் பெட்டையொருத்தி ஒரு துவாயில சுத்தினபடி குழந்தயொண்ட கொண்டந்து தூணுக்குப் பக்கத்தில கிடத்திப் போட்டு சாமி கும்பிட்டுக் கொண்டு நிண்டவள். ‘சின்ன வயதில பிள்ளப் பெத்துப் போட்டு பாவம் ஆத்தலயுது’ எண்டு நினச்சுக்கொண்டு நிண்டன். திடீரெண்டு பாத்தாப் பெட்டயக் காணேல. குழந்த தன் பாட்டில விரலச் சூப்பிக்கொண்டு படுத்திருக்குது.

“இஞ்சேரப்பா அதில குழந்தயக் கிடத்தின பெட்டயக் காணேல”
மனிஷன முழங்கையால இடிக்கிறன்.
“அவள் உங்கினேக்க சுத்திக்கும்பிட்டுக் கொண்டு நிப்பள்.நீ பேசாமல் உன்ர அலுவலப் பாரன்”
எனக்கெண்டா மனம் கேக்கேல.அங்கமிஞ்சயும் சுத்திப் பாத்துக் கொண்டு நிக்கிறன்.பூச முடிஞ்ச பிறகும் அவளக் காணேல. நான் கோயிலெல்லாம் சுத்தித் தேடிக்கொண்டு வந்திட்டன்.அவள் பெட்டயக் காணேல. மனிஷனெண்டா என்ன நெருப்பு மாதிரிப் பாத்துக் கொண்டு நிக்குது. குழந்தயப் கிட்டப் போய்த் தொட்டுப்பாத்தன்.
“ஆம்பிளப் பிள்ளயப்பா”
“கெதியாத் தூக்கிக் கொண்டு வாடி”

சிவலிங்கத்தார்

உவன் சிவாவ நினச்சா வயிறு பத்தி எரியுது.என்ர புள்ள என்ர வீட்டிலயே வேலக்காறன் மாதிரி வளருறான்.வெளீல எப்பிடிச் சொல்லுறது. அண்டக்கு அந்தப் பெட்ட எவளவு கெஞ்சினாள்.

பொன்னம்பலத்தான் கொண்டந்த கசிப்புச் செய்த வேலதான்.மில்லில வேல முடிஞ்சு எல்லாரும் போட்டினம்.பெட்ட மட்டும் உள்ளுக்க கிடக்கிற அரிசி தீட்டுற மிசினடீல கிடந்த தவிட்டக் கூட்டி அள்ளிக்கொண்டு நிண்டாள்.

மீனாட்சியும் அஞ்சாறு நாளா வீட்டில இல்ல. தேப்பன் சாகக் கிடக்குதெண்டு செட்டிக்குளம் போட்டாள்.வெறிதலக்கேறிப்போய் நான் அவளுக்குக் கிட்டப்போய் அவளப்பிடிச்சிழுத்தன்.அவள் திகைச்சுப்போய் திரும்பிப்பாத்தாள். என்ர எண்ணம் விளங்கினோட கையெடுத்துக் கும்பிட்டாள்.
“ஐயா வேண்டாமய்யா.நான் உங்கட பிள்ள மாதிரி ஐயா”
கையெடுத்துக் கும்பிட்டு, ஆத்தேலாமல் என்னோட மல்லுக்கட்டியும் பாத்தாள்……….

அவள் பேந்து வேலக்கும் வாறேல.'உதுகள் உப்பிடித்தானெண்டு’ நானவள மறந்தே போனன்.

பேந்தொருநாள் எங்கட மில்லுக்குப் பின்வளவு கிணத்துக்க ஆரோ விழுந்து செத்துப் போய்க் கிடக்கினம் எண்டு சனம் எல்லாம் ஓடிச்சுது.நானும் போய் எட்டிப் பாத்தன்.அவள்தான் செத்துப் போய்க் கிடக்கிறாள்.உரிச்சு வச்சு என்ர மூத்தவள் போலத்தான் கிடக்குது.எனக்குத் தலயச் சுத்திக்கொண்டு வருது.மெதுவா வந்து ஒரு மர நிழலில நிண்டிட்டன்.

“என்னய்யா தலயச் சுத்துதோ”
திடுக்கிட்டுப் போய்த் திரும்பிப் பாத்தா முத்தன் நிக்கிறான்.
“ஓமடா தலயச் சுத்திக்கொண்டு வருகுது. வெய்யில் சுட்டுப் போட்டுதடா”
“இல்ல ஐயா.என்ர பிள்ளக்கு செய்த அநியாயத்துக்குத்தான்……..”
“என்னடா கதக்கிறா…..எனக்கொண்டும் விளங்கேல”
“நடிக்காதையுங்கோ ஐயா. நடிக்காதையுங்கோ. அவள் மில்லுக்க வேலக்கு போமாட்டன் எண்டு சொல்லேக்கயும்,நீங்கள் அடிக்கடி விசாரிக்கேக்கயும் எனக்கொண்டும் விளங்கேல. இப்ப எல்லாம் விளங்கிப் போச்சுது”
“என்னடா விசர்க்கத கதக்கிறா?”
“எனக்கும் விசர்தான்.அவளுக்கும் விசர்தான். விசரில்லாட்டி கயித்தால கட்டிக்கட்டி மறச்சு வச்சிருந்து பிள்ளயப் பெத்து எறிஞ்சு போட்டு வருவளே.ஆசுபத்திரீல வேல செய்யுற கந்தன் கண்டு சொல்லேக்க எனக்கு உயிரே போட்டுது”
‘நீ நல்ல இருக்கமாட்டா. உன்ர வம்சம் தளைக்காது’ எண்டு மண்ண அள்ளிப் போட்டுத் திட்டுறான்.
“டேய் முத்தன் சத்தம் போடாதயடா.எவளவு காசு வேணுமெண்டாலும் தாறன்”
அவன் ஆவேசமாப் பாத்த பார்வ தாங்கேலாமல் நான் தலயக் குனிஞ்சு கொண்டு நிக்கிறன்.
“காசென்னய்யா காசு. நான் எவளவு காசு தந்தா மீனாட்சிய…..” சொல்ல வந்ததை சொல்லாமல் திடீரெண்டு தலேல அடிச்சுக்கொண்டு குழறுறான்.
“என்ன மன்னிச்சுக் கொள்ளுங்கோ அம்மா. மன்னிச்சுக் கொள்ளுங்கோ.தெரியாமல் சொல்லிப் போட்டன். உங்கட கையால போட்ட சோத்த எத்தின நாள்த் திண்டிருப்பன்”
“டேய் முத்தன் அழாதயடா…..”
“போங்கோ ஐயா.போங்கோ. இதில நிக்காமல் போங்கோ”
“ஒருத்தரிட்டயும்…?”
“சொல்ல மாட்டன் ஐயா. உங்களுக்காக இல்ல.மீனாட்சி அம்மாவுக்காக.நாங்கள் ஏழை எளியதுகள் ஐயா நன்றி மறக்கமாட்டம்”
நான் மெல்ல மெல்ல நடந்து மில்லடிக்கு வாறன்.
“ஓமாம். காளி கோயிலடீலதான் கிடத்திப் போட்டு வந்தவளாம்”
ஆரோ கதச்சுக் கொண்டு போக எனக்குப் பகீரெண்டு நெஞ்சு வலிச்சுது.

செல்வராகவன்

மதவாச்சிப் பாதையூடாக கொழும்புக்குப் போய் வருவதென்றால் உயிர் போய் வரும்.ஆனால் இந்தமுறை பயணக்களைப்பு கொஞ்சங்கூடத் தெரியவில்லை.கடந்த மூன்று நாட்களும் நடந்த செமினாறில் அறிந்த விடயங்கள் மனதைப் பாரமாக அழுத்திக் கொண்டிருந்தன.

மூன்று வருஷமாகப் பிரதேச செயலகத்தில் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தராக வேலை செய்து பெற்ற அனுபவத்தை விட இந்தச் செமினார் பல அனுபவங்களைத் தந்திருந்தது.அந்த வெள்ளைக்காரன் எவ்வளவு அருமையாக விளங்கப் படுத்தினான்.

சிறுவர்கள் என்றால் யார்?
அவர்களுக்குள்ள உரிமைகள் என்ன?
கட்டாயமாக வழங்கப்படவேண்டிய உரிமைகள் என்ன?
சிறுவர் உரிமைகள் மறுக்கப்பட்டால் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் என்ன?
ஒவ்வொரு விடயத்தையும் விளங்கப்படுத்தினான்.
மூன்றாம் நாள் மதிய உணவின் பின்னர் காட்டப்பட்ட வீடியோப் படக்காட்சிகள் வாழ்நாளில் மறந்துவிட முடியாதவை.வெவ்வேறு நாடுகளில் சிறுவர்கள் குழந்தைத் தொழிலாளிகளாகவும், பாலியல் தொழிலாளிகளாகவும் நடத்தப்படுகின்ற கொடுமைகளைச் சித்தரிக்கும் காட்சிகள், பலபேரைக் கண்கலங்கி அழ வைத்துவிட்டன.அந்தக் காட்சிகள் மனதில் வைராக்கியத்தையும் தந்திருந்தன.

வீட்டிற்கு வந்து இறங்கியதும் வழமைபோலவே விசாரணைகள்,உபசரிப்புகள்.
”எப்பிடியடா பிரயாணம்.சுகமா இருந்ததே?”
என்ற தேவையில்லாத கேள்விகள். சாப்பிடும்போது அம்மாவுக்கு மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன்.
“எணயம்மா…சிவலிங்கத்தாற்ற மில்லில வேல செய்யுற சிவா வேண்டி வளத்த பிள்ளயோண?”
“ஓமடா.காளி கோயிலடீல ஆரோ கிடத்திப் போட்டுப்போக மீனாட்சி கண்டு தூக்கிக் கொண்டு வந்தவா.ஏனடா?”
“ஒண்டுமில்ல சும்மா கேட்டனான்”

என்ன செய்யுறதெண்டாலும் அம்மாவுக்குத் தெரியாமல்தான் செய்ய வேண்டும். அம்மாவுக்குத் தெரிந்தால் ‘ஆத்தாவே…அம்மாளே…’ என்று சத்தம் போட்டுக் காரியத்தைக் கெடுத்து விடுவா.

நான் இரகசியமாகக் காரியங்களைச் செய்யத் தொடங்கினேன்.மன்னார் கொன்வென்ற்றுடன் தொடர்பு கொண்டு அட்மிஷன் தொடர்பாக விசாரித்தேன்.சம்மந்தப்பட்ட மேலதிகாரிகள், பொலிஸ் ஆகியோரிடம் அனுமதியைப் பெற்றுக்கொண்டேன்.
குறித்த ஒருநாளில் பொலிஸ், கொன்வென்ரைச் சேர்ந்த சிஸ்ரேர்ஸ் இரண்டு பேர், ஒன்றிரண்டு மேலதிகாரிகளுடன் திடீரென்று சிவலிங்கத்தாரின் மில்லில்போய் இறங்கினேன். சிவா கிணத்தடியில் தண்ணித் தொட்டியைக் கழுவிக்கொண்டு நிண்டான்.
“இல்ல ஐயா உவர் பொய் சொல்லுறார். நாங்கள் அவன எங்கட பிள்ளபோலத்தான் வளக்கிறம்”
“நான் ஏன் பொய் சொல்லப் போறன்? வர்ற வழீல விசாரிச்சனாங்கள்தானே சேர்? சனம் என்ன சொன்னதெண்டு உங்கட காதால கேட்டனீங்கள்தானே!”
“அப்ப ஏனம்மா அவனப் பள்ளிக்கூடம் விடேல?”
மீனாட்சி அம்மா மௌனமாக நிக்கிறா.

“தம்பி இஞ்ச வாரும். உம்மட பேர் சிவாதானே?”
அவன் பதில் சொல்லாமல் முழுசிக் கொண்டு நிற்கிறான்.
“இந்தா இந்த அன்ராக்களோட போய் நிண்டு படிக்கிறீரே? அவ உமக்குப் பாடம் சொல்லித் தருவினம், புது உடுப்பு வாங்கித் தருவினம். வோல் எல்லாம் விளயாடலாம். நல்லாப் படிக்கலாம்”
“இல்ல நான் இஞ்சதான் நிக்கப்போறன்”
“பாத்தியளே ஐயா அவனுக்கு இஞ்ச நிக்கத்தான் விருப்பம். நாளக்குத் துவக்கம் அவனப் பள்ளிக்கூடம் விடுறம்”
ஒரு அதிகாரியின் மனம் மாறத் தொடங்கியது.
“என்ன செல்வராகவன். என்ன செய்வம்?”
“இல்ல சேர் இஞ்ச சரிவராது. இவ இஞ்ச அவனிற்ற நல்லா வேல வாங்கிப் பழகிட்டினம். அவயால அவன வேல ஏவாமல் இருக்கேலாது. இஞ்ச நிண்டா அவனும் சரியாப் படிக்கமாட்டான்”
மற்றைய அதிகாரிகள் என்னுடன் உடன் பட்டதால் அவனைக் கொன்வென்ற்றிற்கு அனுப்பும் முடிவில் மாற்றமேற்படவில்லை.

சிவா “நான் போமாட்டன்” என்று அழுது அடம் பிடிக்கத் தொடங்கினான். செல்லம் அக்கா ஒரு வாக்குக்க அவன்ர காச்சட்ட, சட்டுகளப் போட்டுக்கொண்டோடிவந்து குடுக்கிறா. நான் அவனப் பலாத்காரமா வானுக்க ஏத்துறன்.
அவன் திமிறி வெளீல எட்டிப் பாத்து
“பாலுவுக்கும் மீனாவுக்கும் சொல்லுங்கோ” எண்டுறான்.
எனக்குக் கண் எல்லாம் கலங்கிப் போச்சு. வான் புளுதியக் கிளப்பிக் கொண்டு வெளிக்கிட்டுது.

அவன்ர எதிர்காலம் நல்லா அமையும் எண்ட நம்பிக்கையோட நானும் வெளிக்கிட்டன். திடீரெண்டு கிணத்தடீல பரபரப்பு. திரும்பிப் பாத்தால் சிவலிங்கத்தார் நெஞ்சைப் பொத்திக்கொண்டு விழுந்து கிடக்கிறார்.
’சம்பளம் இல்லாத வேலைக்காரன் போய்விட்ட அங்கலாய்ப்பு’ என்ற எண்ணத்துடன் நான் வீடு நோக்கி நடக்கத்தொடங்கினேன்.

Thursday, July 16, 2009

நான் கண்ட கனவு !

ஏகாந்திர வெளியொன்றினூடாக சொர்க்கத்தை நோக்கிய என் பயணம் தொடர்கின்றது. நான் எனது சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் விரைந்து கொண்டிருக்கிறேன். ஆங்காங்கே வானுயர்ந்து நிற்கின்ற மரங்களின் கனத்த மௌனம் ஒரு பயப்பிராந்தியை உண்டாக்குகிறது. எதிர்ப்படுகிறவர் முகமெல்லாம் “ஏனடா இந்தப் பக்கம் போகிறாய்?” என்று கேட்காமல் கேட்பது போன்ற ஆச்சரிய ரேகை.

‘பிக்கப்’ ஒன்று மின்னல் வேகத்தில் என்னைக் கடந்து செல்கிறது. NP HK 4004. ஓகோ இதில் செல்பவன் என் பிரதேசத்தை சேர்ந்தவன்! அவனைப் பின் தொடரும் நோக்கத்துடன் மோட்டார் சைக்கிளின் வேகத்தை அதிகரிக்கிறேன். அந்த வாகனத்தின் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை. அப்படியொரு வேகம்!

‘வேற்றுக்கிரக மனிதனாக இருப்பானோ?’ அல்லது……
‘பேய் பிசாசாக இருக்குமோ?’
ஏழு மணிக்குப் பிறகு வெளிக்கிட்டிருக்கலாம். இந்த மாதிரி எண்ணங்கள் தோன்றாது இருந்திருக்கும்.

இராட்சத சீப்புக்களால் காட்டு மரங்களை சீவி, உச்சி பிரித்து, வகிடெடுத்தது போன்ற, அகலம் குறைந்த தார் வீதி கண்ணுக்கெட்டிய தூரம்வரை நீண்டு பரந்து செல்கிறது. காட்டுக்குள்ளிருந்து ஒலிக்கும் பறவையினங்களின் ‘கீச் கீச்’ ஒலி மகிழ்வையன்றி கிலியையே தருகிறது.

எருமை மாட்டுக் கூட்டமொன்று ஆடி அசைந்து நடந்து வீதியைக் கடக்கிறது. நான் சட்டென ‘பிறேக்’கைப் பிடிக்க, ஓர் எருமை மாடு நின்று நிதானித்து என்னை முறைத்துப் பார்க்கிறது.

ஒரு காலத்தில் பச்சை வயல் வெளிகளாய் இருந்த இடமெல்லாம் காய்ந்து கருகி வெட்டை வெளியாய் கிடக்கிறது. வாய்க்கால் வழியே தண்ணீர் சலசலவென்று பாய்ந்தோடுகிறது. நீர் வளம் கொழிக்கின்ற பூமி. அப்படியானால் வாழைத் தோட்டங்களாலும், தென்னை மரங்களாலும் நிறைந்திருக்க வேண்டுமே! ஏதோ காரணங்களால் எல்லாம் வெட்ட வெளியாய் விரிந்து கிடக்கிறது.

ஒரு வேளை இஸ்ரேல் உருவாக முன்னர் பாலஸ்தீனமும், எரித்திரியா உருவாக முன்னர் எதியோப்பியாவும், இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் யப்பானும் இப்படித்தான் இருந்திருக்குமோ?

அதோ அங்கே மனிதர்களின் நடமாட்டம். பச்சையுடையணிந்து ஏதோ புரியாத மொழியில் பேசுகிறார்கள். கைகளில் இயந்திரத் துப்பாக்கி. என்னைப் பார்த்ததும் அவர்களில் ஒரு பதட்டமும் பயமும் தொற்றிக் கொள்கிறது. விரல்கள் சுடும் வில்லில் தயாராக இருக்கிறது. நானும் என் காற்சட்டைப் பையைத் தொட்டுப் பார்க்கிறேன். எல்லாம் தயாராக இருக்கிறது. தேசிய அடையாள அட்டை, திணைக்கள அடையாள அட்டை, இன்னும் ஏதேதோ அடையாள அட்டைகள்.

இப்போது ஏதோவொரு குடிமனை அண்மிக்கிறது. பெண்கள் சிலர் பற்றிக் லுங்கிகளை மார்புக்குக் குறுக்கே கட்டியிருக்கிறார்கள். நீரோட்டத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கட்டுகள் தளர்ந்து, மார்பின் அழகுகள் தெரிவதைக் கூடக் கவனிக்காமல் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருக்கும் வாலைக் குமரிகளும் பெண்களும், இயந்திரத் துப்பாக்கி வைத்திருந்தவனின் மொழியில் பேசிச் சிரிக்கிறார்கள். இந்த இயற்கை அழகில் மயங்கி, வேகத்தை குறைத்த நான், இயந்திரத் துப்பாக்கிக்காரனின் நினைவு வந்ததும் வேகத்தை அதிகரிக்கிறேன்.

பேரூந்தொன்று புழுதியைக் கிளப்பிக் கொண்டு பின்னால் வருவது கண்ணாடியில் தெரிகிறது. தலைக் கவசத்தை இழுத்து சரி செய்தபடி வேகத்தை இன்னும் அதிகரிக்கிறேன்.

இப்படியொரு வனாந்திரத்தைத் தாண்டி எங்கே சொர்க்கம் இருக்கப் போகிறது?
“இடப் பிரச்சினை இல்லை….”
“சுகாதாரப் பிரச்சினையில்லை…”
“மக்களுக்கு மகிழ்வான வாழ்க்கை காத்திருக்கிறது….”
எங்கேயோ, எப்போதோ கேட்ட ஞாபகம் இருக்கிறது.

திடீரென வீதி இரண்டு பக்கமும் திரும்புகிறது. நான் திகைத்து நிறுத்த ஒரு இயந்திரத் துப்பாக்கிக்காரன் அருகே வருகிறான். நான் தயாராக மறைத்து வைத்திருந்த அடையாள அட்டையை எடுக்கிறேன். அவன் புரிந்து, வலப்பக்கம் செல்லுமாறு சைகை காட்டினான்.

ஒன்றிரண்டு கட்டடங்கள். ஓரிருவரின் நடமாட்டம். பின்னர் மீண்டும் வனாந்தர வெளிகள்……..? ஓ….இங்கிருந்த வனாந்தர வெளிகளைக் காணவில்லையே…..!

உயர்ந்து வளர்ந்து நின்ற பாலை மரங்களும், முதிரை மரங்களும், வீரை மரங்களும் எங்கே? ஒன்றையும் காணவில்லை.

ஏராளமான பச்சையும், வெளுப்பு நிறமும் கலந்த கனரக வாகனங்கள். காவலரணங்கள். பலர் பச்சை அரைக் காற்சட்டையுடன், தோளில் துவாயுடன் பல் துலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கேயெங்கே சொர்க்கம் இருக்கப் போகிறது? போதும் இனி விழித்து விடலாமோ என்ற எண்ணமேற்படுகிறது……. வேண்டாம் இந்தக் கனவின் முடிவைப் பார்த்து விடலாம்…….. மீண்டும் கண்களை மூடிக்கொள்கிறேன்.
அதோ…. அங்கே….. ஆயிரம் ஏக்கர் காடுகளையும் காணவில்லை.
என்ன நடந்தது?

அங்கேயிருந்த...
புள் இனங்கள் எங்கே?
மயில்கள் எங்கே?
மான்கள் எங்கே?
மரை இனங்கள் எங்கே?
யானைகள் எங்கே?
சிறுத்தைகள் கூட இருந்ததாகச் சொன்னார்களே?
பண்டார வன்னியன் காலத்திலிருந்தே அவை இங்கேதானே வாழ்ந்து வந்தன. அவை எங்கே சென்றிருக்கும்?

ஓ….கொடிய நச்சுப் பாம்புகள் கூட இங்கிருந்தனவே? அவை எங்கே சென்றிருக்கும்? வாழ்ந்த இடத்தைவிட்டு அதிக தூரம் செல்லும் வழக்கம் பாம்புகளிடம் இல்லையே? அப்படியானால் அவை இங்கேதான் எங்காவது சுற்றிக் கொண்டிருக்குமா?

மோட்டார் சைக்கிள் விரைகிறது. மாபெரும் யுத்தப் பிரதேசம் கண் முன்னால் விரிகிறது. யப்பான் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள ‘அமெரிக்கன் பேஸ்’ போன்றிருக்கிறது. யப்பான் போன்றுதான் இங்கும் மக்களின் விருப்பம் கேட்கப்பட்டிருக்க மாட்டாது. காவலரண்களும், சிப்பாய்களும் பயத்தை ஏற்படுத்த விழித்து விடலாமா என்ற எண்ணமேற்படுகிறது. மீண்டும் இன்னும் கொஞ்சம் பார்த்து விடலாம் என்ற எண்ணமே வெல்கிறது.


அதோ அங்கே என்ன சனக்கூட்டம்? வரிசையாகக் காத்திருக்கிறார்கள்? ஒவ்வொருவர் கைகளிலும் பைகள். நெஞ்சின் ஏக்கங்கள் முகங்களில்…… எதிர் பார்ப்புகளாய்….. தேங்கியிருக்கிறது. நானும் அவர்களில் ஒருவனாய் இணைந்து கொள்கிறேன்.

அவர்களின் பைகளை நோட்டம் விடுகிறேன். ஆடம்பரப் பொருட்களா அவை? ஊகூம்….பாண், பருப்பு, கருவாடு, முருங்கைக்காய், தேயிலை, பால்மா, மண்ணெண்ணெய். ‘உணவுப் பிரச்சனை இல்லை’ எங்கோ கேட்ட ஞாபகம் இருக்கிறது. நான் மட்டும்தான் வெறும் கையனாக நிற்கிறேன். பரவாயில்லை. தேவைப்பட்டால் விழித்து விடலாம் தானே!

பல மணிநேரக் காத்திருப்பின் பின், இளம் யுவதிகள் சிலர், அன்ன நடையென அடியெடுத்து வைத்து வருகிறார்கள். அவர்கள் என் தாய்மொழியைப் பேசுகிறார்கள். அவர்களின் முகத்தில் புன்னகை ஒளி வீசுகிறது. மக்களை அண்மித்ததும், தமது முகங்களைக் கடுப்பாக்கிக் கொள்கிறார்கள். மற்றப் பக்கம் பார்த்து விறைப்பாக அமருகிறார்கள்.

“பார்வையாளர்களுக்கு பின் பக்கத்தைக் காட்டக் கூடாது”

அந்த நேரத்திலும் ஒரு இளைஞன் ‘பகிடி’ விடுகின்றான். பலரின் முகத்தில் புன்னகை தோன்றி மறைகின்றது.

‘நகைச்சுவையுணர்வும், நண்பர்களும் இருந்திராவிட்டால் எப்போதோ நான் இந்தப் பூமியை விட்டு மறைந்திருப்பேன்’ யாரோ ஒரு அறிஞன் எவ்வளவு பொருத்தமாகச் சொல்லியிருக்கிறான்.

அங்கே யார்? நான் பார்த்த இயந்திரத் துப்பாக்கி மனிதர்கள்…. வெறுங்கைகளோடு… நிராயுத பாணிகளாய்….. காத்திருந்த மக்கள் கூட்டம் தயாராகி முண்டியடிக்கிறது.

ஒருவரையொருவர் முந்திச் செல்லும் முயற்சி….
காலை வாரும் முயற்சி…..
காட்டிக் கொடுக்கும் முயற்சி….
எல்லாம் நடக்கிறது.
சீ என்ன மனிதர்கள் இவர்கள்…….? எப்போது திருந்துவார்கள்? அல்லது திருந்தவே மாட்டார்களா? முழித்துவிட எண்ணமேற்படுகிறது……ஆனால்…..கண்களை மூடிக்கொள்கிறேன்.

இப்போது ஒவ்வொருவராக பெயர், ஊர், விலாசம் கேட்டுப் பதியப்படுகிறது. கையடக்கத் தொலைபேசிகளும் பறிக்கப்படுகின்றன. நானும் வாயில் வந்த சில விபரங்களைக் கொடுத்து ‘டோக்கன்’ பெற்றுக் கொள்கிறேன்.

புத்தம் புதிய முள்ளுக் கம்பியினால் நெருக்கமாக வரிந்து, அமைக்கப்பட்ட ஒற்றையடிப் பாதையினூடாக உடம்பில் காயமேற்படாதவாறு இலாவகமாக நடந்து அந்தக் காவலரணுக்குள் நுழைகின்றேன்.

கைகளை மேலே உயர்த்தச் சொல்லி, உச்சி முதல் உள்ளங்கால்வரை ஒரு தடவல். பின்…. உள்ளங்கால் முதல் உச்சிவரை ஒரு தடவல். இந்த நுட்பமான ‘தடவல்’ முறையை என் மனைவிக்குக் காட்டிக் கொடுக்க வேண்டும்.
‘தமிழரின் பாரம்பரிய உள்ளாடையான கோவணத்தைக் கைவிட்டது எவ்வளவு நல்லதாகப் போய்விட்டது’ என்ற எண்ணமேற்பட என் உதடுகளில் புன்னகை மலர்கிறது. அவன் முறைத்துப் பார்த்ததை பொருட்படுத்தாமல் ‘றோட்டை’ விரைவாகக் கடக்கிறேன்.

ஓ….என்ன அது? அங்கே மக்கள் கூட்டமொன்று முட்கம்பி தடுப்புக்கப்பால், முண்டியடித்துக் கொண்டிருக்கிறது. அவர்களின் முகங்களில் உறவுகளைத் தேடும் ஆவேசம்! யார் இவர்கள்? எந்த நாட்டின் போர்க்கைதிகள்? அவர்கள் பேசுகின்ற மொழி எனக்குப் பழக்கமான மொழியாக இருக்கிறதே? ஓ…. அது என் தாய்மொழி. அப்படியானால் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்? எங்கிருந்து கொண்டு வந்து இப்படி அடைக்கப்பட்டுள்ளார்கள்?

முட்கம்பித் தடுப்புக்கப்பால் ஒரு இளைஞர் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு ஆவேசமாய்க் கத்துகிறது.
“அண்ண ஆரத் தேடோணும்…?”
“பெயரயும் நம்பரயும் தந்தால் கூட்டியந்துவிட நூறு ரூவாய்”
“கூட்டியந்தாப் பிறகு காசத் தாங்கோ”
“அலவுண்ஸ் பண்ணீக்க அம்பது ரூவாய்”

யார் இவர்கள்..? புரியவில்லை. எனக்கு முன்னால் வந்தவர்கள் அந்த இளைஞர்கள் நீட்டிய தாளில், பெயரையும் ஏதேதோ நம்பரையும் எழுதிக் கொடுக்கிறார்கள்.

அவர்கள் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகளெனப் பறந்தோடுகிறார்கள். கொடுத்தவர்கள் முகங்களில் ஏக்கங்கள்….. எதிர்பார்ப்புகள்…. தவிப்புக்கள்.... அப்பட்டமாய்த் தெரிகிறது.

“சேர் ஆரத் தேடோணும்?” ஒரு இளைஞன் அதட்டலாகக் கேட்க, நான் சற்று விலகி, மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியபடி நிற்கிறேன். அந்த உறவுகளுக்கிடையிலான உரையாடல்களைச் செவிமடுக்கும் ஆவல் என் மனதின் ஒரு மூலையில் எட்டிப்பார்க்கிறது.

“அண்ண குழந்தக்கு ஏதன் வேண்டவெண்டு போட்டான். அண்ணி மடீல வச்சுக் கொண்டிருந்தவா. வெளிச்சம் வர சின்ன ஓட்டதான் கிடந்தது. படீரெண்டு வெடிச்சத்தம் கேக்க அண்ணி ரத்த வெள்ளத்தில மயங்கிப் போய்க் கிடக்கிறா. சின்னவன் துண்டு துண்டா சிதறிப் போய்க் கிடக்கிறான்”


வெளியேயிருந்து கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண் இறையவனின் கருணையை எண்ணியோ என்னவோ அந்த இடத்திலேயே ‘பிரதட்டை’ செய்கிறாள்.

இன்னொரு பக்கம் பார்வையைத் திருப்புகிறேன். “அம்மா செத்தது கூட எனக்குத் தெரியாதடி தங்கச்சி” ஒரு தமக்கை நெஞ்சு விம்மி வெடிக்கிறாள். கட்டிப் பிடித்து அழக்கூட முடியாத சோகம். ஒவ்வொரு காட்சியும் நெஞ்சை ஓராயிரம் அம்புகளாய்த் தைத்து ரணகளமாக்குகிறது.

அங்கே இன்னொரு தாய் கம்பியினூடாக கைகளை நுழைத்து கர்ப்பிணியான தன் மகளுக்கு ‘பணிஸ்’ ஊட்டுகிறாள். அவள் வயிற்றில் இருக்கும் அந்தப் பாலகன் - இந்த கேடுகெட்ட உலகத்தைப் பார்க்க முன்னரே - தன் தந்தையை இழந்து விட்டதை அவளின் வெறுமையான நெற்றி பறை சாற்றுகிறது. அவளது கண்களோ தண்ணீர்ப் பஞ்சத்தை போக்கும் முயற்சியில் தாராளமாய் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

இரண்டு முதியவர்கள் முள்ளுக் கம்பிகளுக்கூடாக கைகளை நீட்டி, ஒருவரையொருவர் பற்றியவாறு நிற்கிறார்கள். வெளியே நிற்பவரின் கண்கள் நீரைச் சொரிய, உள்ளேயுள்ளவர் “தம்பி… தம்பி…“ என்கிறார். ஆனால் அவரைப் பார்த்தால் ஓரு பத்து வயது அதிகமாய் இருப்பார் போலத் தெரிகிறது.


ஒரு இளைஞன் ஆவேசமாகக் சொல்கிறான். “நீ கையெழுத்துப் போடாதயண…நான் வெளீல வந்தாப் பிறகு எல்லாத்தயும் கவனிக்கிறன்” அந்தப் பெண்ணும் ஆமோதிப்பது போலத் தலையாட்டுகிறாள்.


அங்கே ஓரு மூலையில்….யார் அது? ஒரு கணவனும் மனைவியும் போலத் தெரிகிறதே! நான் இங்கிதம் கெட்டு அதனையும் செவி மடுக்கின்றேன். இருவரினதும் திருமணம் ஒரு பங்கருக்கருகே மரத்தடியில் நடந்த ஒருநாளில், திடீரென குண்டு மழை பொழியத் தொடங்கியதாம். திசைக்கொருவராய் சிதறியோடிய போது அவன் அவளையும், அவள் அவனையும் பிரிந்து தவறவிட்டு விட்டார்களாம். இப்போது தினம் தினம் முள்ளுக் கம்பியினூடாக சந்தித்துக் கொள்ளும் பாக்கியம் கிடைத்துள்ளதாம்.

அங்கே என்ன சல சலப்பு? பார்வையைத் திருப்புகிறேன். பதின்மூன்று வயது மதிக்கத் தக்க சிறுமியொருத்தி, இரண்டாய் மடிந்து கீழே குந்தியிருந்து “ஐயோ….. அம்மா….” என்று கத்துகிறாள். புரியாத இள வட்டம் சுற்றி வளைக்க, அந்தத் தாய் பட்ட வேதனை…… இந்த உலகத்திலேயே எவரும் அனுபவித்திருக்க மாட்டார்கள்.


இன்னொரு புறத்தில், ஒரு தாய். முப்பத்தைந்து வயதிருக்கலாம். குழந்தையை கம்பி வேலிக்கு மேலால் தூக்கி, ஒரு முதியவரிடம் கொடுக்கிறாள்.

குழந்தையைப் பார்க்கும் போது
அந்தப் பிஞ்சு வயிறு
ஒட்டி உலர்ந்து….
என் நெஞ்சு வெடித்து….
நெலோமியின் ‘ஐந்து மணியாச்சா…..’ கவிதை வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது.
அந்த முதியவர் குழந்தையை கட்டியணைத்து தன் முத்தத்தாலும், கண்ணீராலும் நனைக்கிறார். பேரனாக இருக்க வேண்டும்.

பச்சையுடையணிந்தவன் அந்த முதியவரை ஏதோ சொல்லி மிரட்டுகிறான். அவர் கெஞ்சும் விழிகளால் அவனை மன்றாட்டமாகப் பார்க்கிறார். அவன் பொருட்படுத்தாமல் ஒற்றையடி முட்கம்பிப் பாதையின் ஓரத்திற்கு அவரை இழுத்துக் கொண்டு வந்து விடுகிறான்.

பிள்ளையைக் கொடுத்த தாய் பதட்டமடைகிறாள். அவள் “அப்பா பிள்ளையைத் தாங்கோ” என்று கையை நீட்டிக் குளற…… முதியவர் அவன் பிடியை உதறி…… ஓடி வந்து, பிள்ளையை கம்பி வேலிக்கு மேலால் கொடுக்கிறார். அந்த அவசரத்தில் பிள்ளையின் காலில் முள்ளுக்கம்பி கீறிக் கிழித்து….அந்தப் பிஞ்சுப் பாலனின் இரத்தம் நிலத்தில் சிந்தி, பூமி செந்நிறமாகிறது.

ஐயோ வேண்டாம் இந்தக் கொடுமை என்று மற்றப் பக்கம் திரும்புகின்றேன். என் கண்களிலிருந்து தெறித்து விழுகின்ற கண்ணீரைப் பார்த்த ஒரு இளைஞன், “ஆர அண்ண தேடோணும்….காசில்லாட்டியும் பரவாயில்லை” என்கிறான்.

நான் முடிவு செய்து விட்டேன். வேண்டாம் இந்தக் கனவு. கனவென்றால் ஒரு இன்பம் ஊற்றெடுக்க வேண்டும். மனது ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்க வேண்டும். ஒரு மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்க வேண்டும். நெஞ்சில் வேதனையையும், சொல்லவொணாத் துன்பத்தையும் கொடுப்பதென்றால் அந்தக் கனவே தேவையில்லை.

கண்களைத் திறக்க முயற்சிக்கிறேன். முடியவில்லை. பக்கத்தில் கையை நீட்டித் தேடுகிறேன். என் மனைவியையும் காணவில்லை. இது என்ன கொடுமை? நான் எங்கே இருக்கிறேன்? நான் கண்டது கனவில்லையா? உறுதிப் படுத்துவதற்காக என்னை நானே கிள்ளிப் பார்க்கிறேன்.

“ஆனந்தக் குமாரசாமி இடைத்தங்கல் நிவாரணக் கிராமம் உங்களை அன்புடன் வரவேற்கிறது” என்ற அறிவித்தல் பலகை கண்களில் பளிச்சிடுகிறது.

Tuesday, April 1, 2008

பச்சோந்திகள்

“சேர் உங்களப் ப்ரின்ஷிப்பல் வரட்டாம்”
வகுப்பறையில் மும்முரமாய்ப் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது பீயோன் வந்து சொன்னான்.

“இந்த மனிஷனுக்கு ஒரு மண்ணும் தெரியாது.நேரம் காலம் தெரியாமல் கூப்பிடும்.இதுக்குத்தான் சொல்லுறது படிப்பிச்சு அனுபவம் உள்ளவன் ப்ரின்ஷிப்பலா வரோணுமெண்டு”

எனது முணுமுணுப்பின் அர்த்தம் முழுமையாக விளங்காத போதும் நான் ப்ரின்ஷிப்பலை பேசுகின்றேன் என்பது மாணவர்களுக்கு விளங்கியிருக்க வேண்டும்.அவர்கள் எல்லோரும் மௌனமாய் இருந்தார்கள்.

பீயோன் வழமை போலவே புன்சிரிப்புடன் தலையைக் குனிந்து கொண்டு சென்றான்.

‘இந்த றாஸ்கலை முதலில துலைக்க வேணும்.இவன்தான் எல்லாரையும் போட்டுக் குடுக்கிறது’
மனதுக்குள் கறுவிக் கொண்டே பின் தொடர்ந்தேன்.

“என்ன சேர்…எட்டரைக்குள்ள ரெலிபோன் வந்திட்டுது போல”
கன்ரினுக்குள் இருந்து கனகலிங்கம் மாஸ்டரின் குரல் கேட்டது.

‘கூப்பிட்டவுடன போகக் கூடாது.கொஞ்ச நேரம் பாத்துக் கொண்டிருக்கட்டும்‘ என்ற எண்ணத்துடன் நானும் கன்ரீனுக்குள் நுழைந்தேன்.

“பாருங்கோ சேர்.இரண்டாம் பாடம் இப்பதான் துடங்கினது.அதுக்குள்ள வரட்டாம்”
கனகலிங்கம் மாஸ்டரை மெதுவாகப் பேச்சுக்குள் இழுத்து விட முயன்றேன்.

“ஓம் தம்பி அனுபவம் இல்லாத ஆக்களைப் ப்ரின்ஷிப்பலாப் போட்டா இப்பிடித்தான் பள்ளிக் கூடம் நடக்கும்”
கனகலிங்கம் மாஸ்டரும் எனது கருத்தையே கொண்டிருப்பது எனக்குச் சற்று உற்சாகம் அளித்தது.

“முந்தி இருநத அதிபர் எவ்வளவு நல்லாப் பள்ளிக் கூடம் நடத்தினவர். இவனப் போட்டதில இருந்து தலயிடிதான்”
ஆத்திரத்தில் வார்த்தை தவறாக வந்ததும் சட்டென்று நிறுத்தி சுற்று முற்றும் பார்த்தேன்.கனகலிங்கம் மாஸ்டர் என் தோள்களைத் தட்டி

“கோபப் படாதையும் தம்பி.முந்தியெண்டா பத்துப் பதினஞ்சு வரியம் ரீச்சரா இருந்தாத்தான் உபஅதிவரா வந்து பேந்து அதிபரா வரலாம்.இப்ப SLEAS பாஸ் பண்ணினவுடன ப்ரின்ஷிப்பலாப் போடுறாங்கள்.அவங்களுக்கு ஒரு நாசமும் தெரியாது”
“ஓம் சேர் தமிழும், கிண்டுக்கல்ச்சரும் படிச்சுப் போட்டு அஞ்சாம் வகுப்பு ஸ்கொலஷிப் மாதிரி சோதின பாஸ் பண்ணினவுடன பெரியாக்களோ இவங்கள்”

“என்ன ப்ரின்ஷிப்பலப் பற்றிக் கத நடக்குது போல”
ஆதித்தியன் சேரும் கன்ரினுக்குள் வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டார்.

“ஓம் சேர்…இந்த மனிஷன் வந்தாப் பிறகு நடக்கிற சீர் கேடுகளைப் பற்றிக் கதச்சுக் கொண்டிருக்கிறம்”

“கண்ட கண்ட நேரத்தில எல்லாம் ஆள விட்டுக் கூப்பிடுறதால எங்கட படிப்பிப்பு வேலயெல்லே குழம்புது”

“இவர் மட்டுமில்லயாம் இந்த முறை SLEAS இல எடுபட்ட எல்லாரும் இப்பிடித்தான் துள்ளிக்குதிக்கிறாங்களாம்”

“ஏனாம் அப்பிடி?”

“ஒரு வேலயயும் பிற்போடக்கூடாது.உடனேயே செய்து முடிக்கோணும் எண்டு ரெயினிங்கில சொல்லிக் குடுத்தவயாம்”

“அப்ப O\L சோதின எடுக்கிற பிள்ளயளுக்கு முதலாம் தவணேலயே எல்லாத்தயும் படிப்பிச்சு விட்டாச் சரியோ”
ஏல்லோரும் வாய் விட்டுச் சிரிக்க ப்ரின்ஷிப்பலை மட்டம் தட்டி விட்ட திருப்தியுடன்

“அப்ப சரி நான் போய் என்னெண்டு கேட்டுக் கொண்டு வாறன்”
நான் அதிபரின் அலுவலக வாயிலை அடையவும் இரண்டாம் பாடம் முடிந்து பெல் அடிக்கிறது.

“குட் மோனிங் சேர்”

“குட் மோனிங்…..இருங்கோ”

“சேர் வரச் சொன்னனீங்களாம்”

“ஓம் சேர்.அடுத்த வருஷம் A\L எக்ஸ்சாம் எடுக்கிற பெடியளின்ர அலுவலா உங்களோட கதக்க வேணும்”

“என்ன சேர்? சோல்லுங்கோ?”

“தங்கட Batch எல்லாரும் சேர்ந்து ரூர் போகப் போகினமாம்.ஸ்ரூடன்ட் யூனியன் மூலமாப் பெமிஷன் கேட்டுக் கடிதம் எழுதியிருக்கினம்.இப்ப இருக்கிற நிலமேல இது அவசியமே சேர்”
கடிதத்தை என் முன்னால் தள்ளி வைத்தார்.நான் சிறிது நேரம் அமைதியாக இருந்தேன். ப்ரின்ஷிப்பலை எதிர்க்க இறைவனால் கொடுக்கப் பட்ட இந்த சந்தர்ப்பத்தை இழக்க நான் தயாராக இல்லை.

“கற்றல் புறச் செயற்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேணும் சேர்.தனியப் பிள்ளயளப் பூட்டி வச்சுக் கொண்டிருந்து படிப்பிச்சாக் காணாது”

“அது எனக்கும் தெரியும் சேர்.இப்ப கொஞ்சம் நாட்டு நிலம மோசமாக் கிடக்கு.குண்டு வெடிப்பு……..கிளைமோர் எண்டு…..பிள்ளயளின்ர பாதுகாப்ப பாக்கவெல்லே வேணும்”

“உப்பிடிப் பாத்தா நாங்கள் ஒண்டுமே செய்யேலாது.நாட்டுப் பிரச்சினையைப் பற்றி யோசிக்காமல் செய்ய வேண்டியதைச் செய்யத்தான் வேணும்”

“அது சரி சேர். இப்ப பிரச்சின கொஞ்சம் மோசமாவெல்லே கிடக்கு”

“உங்களோட என்னால உடன் படேலாது சேர்.பிரச்சினயெண்டு பாத்துப் படிக்காமல் விட்டிருந்தா நீங்கள் B.A பட்டதாரியாகவோ நான் Bsc சிறப்புப் பட்டதாரியாகவோ வந்திருக்கேலாது”
அதிபரை விட நான் Qualification கூடியவன் என்பதைப் பொருத்தமான சந்தர்ப்பத்தில் சுட்டிக் காட்டினேன்.

“அப்ப முடிவா என்ன சேர் சொல்லுறியள்?”

“பிள்ளயளின்ர உரிமேல அளவுக்கதிகமாத் தலயிடக் கூடாது சேர். ரூர் போக ஒழுங்கு படுத்திக் குடுக்கிறதுதான் நல்லது”

“சரி.இன்னும் நல்லா யோசிப்பம்.கடைசிப் பாடம் ஸ்ராப் மீற்றிங் வச்சுக் கதப்பம்”

நான் நேராக நூலகம் நோக்கிச் சென்றேன்.நான்கைந்து பேர் கைகளில் அன்றைய தினசரிப் பத்திரிகையை வைத்திருந்தபடி கதைத்துச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

“இஞ்ச பாருங்கோவன். செல்வராகவன் சேரும் லைஃப்ரரிக்கு வாறார்”

நான் லைஃப்ரரிக்கு செல்வது குறைவுதான்.பாடம் இல்லாத நேரத்தில் ஸ்ராஃப் றூமில் புத்தகமும் கையுமாக இருந்து விடுவேன்.அதிபரிடமிருந்து கிடைத்த தகவலையும் அதனை நான் எதிர்த்ததையம் மற்றவர்களிடம் சொல்லிவிட வேண்டும் என்ற ஆர்வக் கோளாறினால் லைஃப்ரரிக்கு சென்றேன்.

“தெரியுமோ சங்கதி? A\L பெடியள ரூர் போக விடாமல் மறிக்கப் போறாராம்”
“இவற்ற அட்டகாசம் தலக்கு மேல போகத் துவங்கிட்டுது.போன சரஸ்வதி பூசையையும் பெரிசாச் செய்ய விடாமல் மறிச்சுப் போட்டார்” – செல்வநாயகம் சேர்.
“அது பரவாயில்ல சேர். 'ரீச்சர் இண்டக்கு தேவாரம் பாடுங்கோ’ எண்டு என்னயெல்லே மாட்டிவிட்டுட்டார்.மாட்டன் எண்டு சொன்னதுக்கு ‘ரீச்சர்ஸ்தான் முன் மாதிரியா நடக்க வேணும்.அப்பதான் பிள்ளயள் பின்பற்றி நடக்கும்’ எண்டு உத்தரவெல்லே போட்டவர்” – வாசுகி ரீச்சர்
எனக்குஆதரவு அதிகரித்துச் சென்றது.

“இந்த முறை பெடியள ரூர் அனுப்பாமல் விடுறேல.நாங்களெல்லாரும் ஒண்டாச் சேந்து நிண்டா அவரால ஒண்டும் செய்யேலாது”
நான்காம் பாடம் முடிந்து பெல் அடிக்க கன்ரீன் நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

சுடச் சுட வடையும் கண்டித்தேயிலையில் சுந்தரம் போட்ட பால்த் தேநீருமாய் இன்றைய ஸ்ராஃப் மீற்றிங்கில் ஆசிரியர்கள் எல்லோரும் ஒருபக்கம் நின்று அதிபரை எதிர்ப்பதாகவும், பிள்ளைகளை எப்படியும் ரூர் போக அனுப்புவதாகவும் முடிவு செய்து கொண்டோம்.

ஏஞ்சிய மூன்று பாடங்களும் நகர்ந்து பிள்ளைகளை ஏழாம் பாடத்துடன் வீட்டுக்கு அனுப்பிய பின்னர் ஸ்ராஃப் மீற்றிங் தொடங்கியது.

“எல்லோருக்கும் வணக்கம்.ஒரு முக்கியமான விசயமாக கலந்தாலோசிப்பதற்காகத்தான் இந்த அவசர ஸ்ராஃப் மீற்றிங்.உங்கள் எல்லோருக்கும் விசயம் தெரிந்திருக்குமென நினைக்கின்றேன்”
என்னைப் பார்த்து விஷமமாகச் சிரித்தார்.நான் தெரியாதது மாதிரி வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தேன்.

“A\L ஸ்ருடென்ட்ஸ் ரூர் போவதற்கு பெமிஷன் கேட்கிறார்கள்.தற்போதய நாட்டுச் சூழ்நிலையில் ரூரிற்கு அனுமதியளிக்க முடியாது.உங்களுடய அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ளவே இந்த அவசர ஸ்ராஃப் மீற்றிங்”
அனைவரும் அமைதியாக இருக்க கனகலிங்கம் சேர் என் துடையில் கிள்ளினார்.

“மன்னிக்க வேணும் சேர்.கற்றல் செயற்பாடுகள் எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு கற்றல் புறச் செயற்பாடுகளும் முக்கியமானதுதான். Educational Tour என்பது எமது கல்வித்திட்டத்தில் அனுமதிக்கப் பட்ட விடயம்தான்”

“இப்ப பிரச்சினை அதில்ல. ரூர் செல்வதற்கு பொருத்தமான சூழ்நிலை இல்லை.பாதுகாப்புப் பிரச்சினைகள் இருக்கிறது”

“அப்பிடிப் பாத்தா உந்தப் பாதையால வந்து போறதும் பாதுகாப்பில்லைத்தான்.பிள்ளயள பள்ளிக்கூடம் வராமல் வீட்ட நிக்கச் சொல்லவெல்லோ வேணும்”
கனகலிங்கம் சேர் பொருத்தமான நேரத்தில் நெத்தியடி அடிக்க சிரிப்பொலி ஒருகணம் பரவி மறைந்தது.

“நீங்கள் ஒரு முடிவோடதான் வந்திருக்கிறியள் போலக்கிடக்கு.நான் மட்டும் என்ன செய்ய முடியும்.அப்ப ரூர் போகப் பெமிஷனைக் குடுப்பம்”
சாதித்து விட்ட திருப்தியில் நிமிர்ந்து அமர்ந்தேன்.

“ஆனால் சில விஷயங்களை ஒழுங்காகச் செய்ய வேணும்.இரண்டு ஜென்ஸ் ரீச்சரும் இரண்டு லேடிஸ் ரீச்சரும் கட்டாயம் போகவேணும்”
எங்கே நான் அகப்பட வேண்டி வரமோ என்ற அவசரத்தில் பேசத்தொடங்கினேன்.

“நாங்கள் கட்டாயம் போவம் சேர்.வாசுகி ரீச்சர்,செல்வராணி ரீச்சர்,ஆதித்தியன் சேர்,கனகலிங்கம் சேர் நாலு பேரும் போவினம் சேர்”

ஆதித்தியன் இளம் பட்டதாரி ஆசிரியர்.கனகலிங்கம் சேர் நாற்பது வயது தாண்டிய மனிஷன்.மனிஷியின் கரைச்சலில் இருந்து நாலு நாள் தப்பவதற்காக கட்டாயம் போகும்.வாசுகி இளம் பெட்டை.செல்வராணி ரீச்சர் போனாத்தான் பெடியளக் கட்டுப் படுத்தலாம்.பொருத்தமான நான்கு பேரை நான் முன்மொழிய அவர்களும் மௌனத்தால் தமது சம்மதத்தைத் தெரிவித்தார்கள்.

“அப்ப சரி.எல்லா ஒழுங்குகளையும் செய்து கொடுப்பம்.பிள்ளைகள் கவனமாப் போய் வந்தாச் சரி.இத்துடன் கூட்டத்தை நிறைவு செய்வோம்”
வாசுகி ரீச்சர் பாடசாலைக் கீதம் பாடி முடிந்ததும் எல்லோரும் கலைந்து சென்றோம்.

கனகலிங்கம் சேர் என் தோள்களில் கையைப் போட்டவாறு
“என்ன செல்வராகவன். நினச்சதச் சாதிச்சுப் போட்டியள்.பெடியளுக்காக நல்லாத்தான் கஷ்டப் படுறியள்”

“நீங்கள் ஒண்டு சேர்.பெடியளை அனுப்பி விட்டா நாலு நாளக்கு சும்மா இருக்கலாமெண்டுதான்”

கனலிங்கம் சேர் மௌனமாய் விலகிச் சென்றார்.மோட்டார் சைக்கிள் ஸ்ராண்டைத் தட்டும் போது ப்ரின்ஷிப்பல் யாருடனே ரெலிபோனில் கதைக்கும் சத்தம் தெளிவாகக் கேட்டது.

“ஓம் மச்சான்.இண்டக்கும் நல்ல அலுப்படிச்சுப் போட்டுத்தான் ரூர் போக அனுமதிச்சனான்.இல்லாட்டி எங்களப் பற்றி லேசா நினைச்சுப் போடுவாங்கள்”

(யாவும் கற்பனை)



பின்குறிப்பு : 27.01.2008 அன்று தினக்குரல் பத்திரிகையில் வெளியானது.

மனிதம் தோற்பதுண்டோ!

காலைக்கடன்களைப் பொறுத்தவரையில், மற்றவர்களை விட ராசனுக்கு ஒரு வேலை அதிகம் இருக்கிறது.

மலசலகூடம் சென்று வந்த பின் முகம் கழுவக் கிணற்றடிக்கும் போக முன்னர் இவ் வேலையை முடித்து விடுவான்.

வவுனியாவில் அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ள திருட்டுச் சம்பவங்களின் பின்னர், இரவில் மோட்டார் சைக்கிள்கள் கராஜ் இனைத் தாண்டி உள் விறாந்தையில் இடம் பிடிக்க தொடங்கியிருந்ததன.

உள் விறாந்தைகளில் நித்திரை கொள்ளும் பேரன் பேத்திகள் இப்போது வெளி விறாந்தைக்கு இடம் மாற்றம் பெற்றிருந்தனர்.

துவிச்சக்கர வண்டிகள், இரவில் ஒன்றாகச் சேர்த்து சங்கிலிகளால் கட்டப்பட்டு, ஒற்றுமையாக இருக்கக் கற்றுக்கொண்டுள்ளன.

ராசன் 6 மணிக்கெல்லாம் அலாரம் இல்லாமலே எழும்பி விடுவான். இரவிரவாக கேட்கத் தொடங்கியுள்ள ஷெல் சத்தங்களை எண்ணிக் கொண்டிருந்த பேத்திக்கிழவி காலையில்தான் உறங்கிக் கொண்டிருக்கும்.

கிழவியின் நித்திரையைக் குளப்பி விடாதபடி உள் விறாந்தையிலிருந்து தனது சிவப்பு நிற CD-Dawn மோட்டார் சைக்கிளை கவனமாக உருட்டிக்கொண்டு முற்றத்திற்கு வருவான்.

இவன் முற்றத்திற்கு வருகின்ற நேரம், பக்கத்து வீட்டடியில் English Personal Class கொடுக்கும் மாஸ்டரின் ‘கோண்’ சத்தம் தினமும் கேட்கும்.

பிளாஸ்டிக் வாளியில் குளிர்ந்த தண்ணீரை அள்ளிக் கொண்டு வந்து, தோய்த்துக் காய்கின்ற துணியை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து தனது மோட்டார் சைக்கிளை கவனமாய், ஒவ்வொரு பகுதி பகுதியாக துடைப்பான்.

மற்றவர்களைப் பொறுத்தவரை மோட்டார் சைக்கிள் என்பது ஒரு வாகனம். இவனைப் பொறுத்தவரை அவனது முழுக்குடும்பத்தினதும் ஒட்டுமொத்த உழைப்பு. அதனை பாதுகாக்க வேண்டியது தனது தலையாய கடமையாகக் கருதினான்.

“கம்பஸ் முடிச்ச எத்தினை பெடியள் வேல இல்லாம இருக்கிறாங்கள். உனக்கெதுக்கு கம்பஸ். அதுவும் பீ.ஏ படிப்பு. கொக்காவுக்கும் முப்பது தாண்டப்போகுது. அவளையும் ஒருத்தன்ர கையில பிடிச்சுக் குடுக்க வழியில்லாம கிடக்கு. நீ படிச்சது காணும். ஒரு வேல தேடுறது எனக்கு நல்லதாப்படுது”

அப்பா யோசனை சொல்கிறாரா?அல்லது உத்தரவு போடுகின்றாரா? என்பது புரியாத போதும் தனது குடும்பத்தின் இன்றைய நிலையை உணர்ந்து, அவன் அந்த வேலையில் சேர்ந்திருந்தான்.

அரச சார்பற்ற நிறுவனமொன்றில் ‘கேட்செக்குரிட்டி’ வேலை. ஓவ்வொரு தடவையும் வாகனம் உள்ளே வரும் போதும் வெளியே போகும் போதும் திறந்து திறந்து மூடவேண்டும்.அந்த நிறுவனத்திற்குப் பெரியவனான அந்த வெள்ளைக்காரன் கக்கூசுக்குப் போவதென்றாலும் தனது வதிவிடத்திற்குத்தான் சென்று வருவான்.

வேலைக்குப் போகும் ஒரு நாளுக்கு நானூறு ரூபா என்பது அவனின் குடும்பத்தை பொறுத்தவரை மிகப் பெரிய வருமானம்.

வேலைக்குப் போன தொடக்கத்தில் தன் ‘புஷ்’ சைக்கிளில் தான் போய் வந்தான். அப்பாவால் செல்லமாக ‘றலிக்குதிரை’ என்று அழைக்கப்படும் அந்த சைக்கிள் அப்பா பாரிசவாதத்தால் படுத்த படுக்கையாகிவிட்ட பிறகு இவனின் கைக்கு மாறியிருந்தது. அவனது A\L படிப்புக்கும், பின்பு வேலைக்குச் செல்வதற்கும் அது தான் ஆஸ்தான வாகனமாக இருந்தது.

காலையில் எழும்பி பத்து கிலோமீற்றர் தூரம் சைக்கிளில் மிதிக்க முள்ளந்தண்டு கொதிக்கத் தொடங்கிவிடும். பிறகு எட்டு மணி தொடக்கம் ஐந்து மணி வரைக்கும் கேற்றில் நிற்க கால்களும் வலிப்பெடுக்கத் தொடங்கும். வீட்டுக்கு வந்தால் உடனே நீட்டி நிமிர்ந்து படுக்க வேண்டும்.

“அவனுக்கென்ன வயது போட்டுதே! இளந்தாரிப்பிள்ளை.எப்பிடிச் சுறுண்டு போனான்” என்ற அம்மாவின் புலம்பல் ஆறுதலை விட அரியண்டத்தையே அதிகம் தந்தது.

அப்பா தான் இந்த மோட்டார் சைக்கிள் வாங்கும் யோசனையை சொன்னார். இருபதாயிரத்து சொச்சம் புகையிலை செய்யும் போது வங்கியில் போட்ட காசையும் கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.

- தங்கச்சியின் சாமத்தியச் செலவிற்கென்று அம்மா வைத்திருந்த முக்கால் பவுண் சங்கிலி
- அக்கா சட்டை தைத்துக் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்த காசு
- பேத்திக் கிழவியின் ஒரு சோடி தூக்கணத்தோடு
- தன் நண்பனிடம் கடன்பட்டது என்று பொய் சொல்லிய அவனது வங்கிக் கணக்கில் இருந்த பணம்

எல்லாமுமாக சேர்ந்து CD-Dawn ஆக மாறியிருந்தன.

*******************

இன்று திங்கட்கிழமை. பொதுவாக திங்கட்கிழமைகளில் பிரதம எழுதுவினைஞருக்கு ‘சூறணவன்’ ஏறிவிடுவது வழக்கம். எனவே அலுவலகத்திற்கு விரைவாகச் சென்றுவிட வேண்டுமென்று நேற்றே எண்ணியிருந்தான்.
அவன் வேலைக்கு வெளிக்கிட்ட போது
“இந்தா தம்பி…. இந்த சீட்டுக்காசை கனகம் அக்காற்ற குடுத்திட்டுப்போ…. பின்னேரமானா கழிவில்லாமல் முழுக்காசும் குடுக்கோணும்”

என்று தாய் சொன்னதை மறுக்கமுடியாததால் இன்று வழமையை விட பத்து நிமிடங்கள் தாமதமாகி விட்டது.

காலை வேளையில் ஸ்ரேஷன் றோட்டால் பயணம் செய்வது சரியான கஷ்டம். பள்ளிக்கூடப் பிள்ளைகளால் நிரம்பி வழியும். மன்னார் றோட்டால் குருமன்காட்டுச் சந்தியின் ஊடாகப்போனால் அலுவலகத்தை இலகுவாக அடைந்து விடலாம்.

குருமன்காடு என்பது 1990களில் உண்மையிலேயே வெறும் காடுதானாம். இப்போது அது வவுனியாவின் முக்கிய நகரமாக வளர்ந்திருந்தது. ‘குட்டிஜெனிவா’ என்று சொல்லுமளவுக்கு எல்லா அரசசார்பற்ற நிறுவனங்களும் இப்பகுதியிலேயே அமைந்திருக்கின்றது.

காளிகோயில் சந்தியைக் கடக்கும் போதுதான் அதனை அவதானித்தான்.

கொழுகொழுவென்று வளர்ந்திருந்த சிறிய நாய்க்குட்டியொன்று நடுரோட்டில் அங்குமிங்கும் பார்த்து மிரண்டுகொண்டு நின்றது. தன்தாயை தவறவிட்டு எப்படியோ ரோட்டிற்கு வந்துவிட்டது.

ராசன் பொதுவாகவே பிராணிகளில் இரக்ககுணம் உள்ளவன். அதிலும் நாய்க்குட்டியென்றால் அதன் மீது தனி அன்பு அவனுக்கு.

மோட்டார் சைக்கிளின்; வேகத்தைக் குறைத்து ஓரமாக நிறுத்தி சுற்றும் முற்றும் பார்த்தான். மரங்கள் மட்டுமே பச்சையாக இருந்தன.

‘அப்பாடா நல்ல காலம்’ என்று சைக்கிளை நிறுத்திவிட்டு நாய்க்குட்டியை நோக்கி ஓடிச்சென்று கைகளில் தூக்கிக்கொண்டான்.

“இந்த வாகன நெரிசலில் ஏன் றோட்டுக்கு வந்தாய். ஏதும் வாகனம் இடிச்சு சாகவெல்லோ போறாய்”

என்று நாய்க்குட்டிக்கு சொல்லியவாறே கோயில் வாசல் வரை சென்று அதனை பத்திரமாக இறக்கிவிட்டான். அந்த சிறிய நாய்க்குட்டி வாலை ஆட்டி தன் நன்றியை தெரிவித்தது.

கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி தன்மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்த இடத்தை நோக்கி வந்த போது அங்கே நான்கைந்து இராணுவத்தினர் அதனை சுற்றி வளைத்து நின்றனர்.

“ஏய் இந்த இடத்தில் வாகனம் நிறுத்தக் கூடாது என்று தெரியாதா?”
அவன் பதில் சொல்ல முன்னம் ஒருத்தனின் துவக்குப்பிடி ராசனின் பிடரியைப் பதம் பார்த்தது.

கடைவாசல்களிலும், வீதியோரங்களிலும் வாகனம் நிறுத்தக்கூடாது என்று புதிதாக பிறப்பிக்கப்பட்ட சட்டம் பின்னர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்த போதும் இராணுவத்தினர் அவ்வப்போது அதனை கடைப்பிடிக்கத்தான் செய்கின்றனர்.அவர்களை யாரும் கேட்க முடியாது.அவர்கள் நினைத்தால் ராசனை அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி கைது செய்யவும் முடியும்.அந்த மோட்டார் சைக்கிளை கொண்டு சென்று தபாற்கந்தோருக்கு முன்னால் உள்ள வெளியில் கருவாடு காயப் போடவும் முடியும்.

தன் பிடரியைப் பொத்தியபடி நிலத்தில குந்தியிருக்கும் ராசன் மனிதம் தோற்பதை கண்கூடாக கண்டான்.

அவன்மட்டுமல்ல …. நாமும்தான் தினம் தினம் கண்டுகொண்டிருக்கின்றோம்.

(யாவும் கற்பனை)




பின்குறிப்பு : 25.11.2007 அன்று தினக்குரல் பத்திரிகையில் இந்த கதை வெளியாகியது.

Friday, March 14, 2008

இன்றைய காலத்தின் தேவை தொழில்சார் கல்வி

இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் பொருளாதார நிறைவு ஏற்படாமைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று தொழில்கல்வி மற்றும் தொழில் பயிற்சி வளர்த்தெடுக்கப்படாமையே என்பது அனைவரினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.

பாடசாலைகளில் வாழ்க்கைத் தேர்ச்சி கல்வியினூடாக தொழிற்பயிற்சிகளை வழங்குவதன் பொருட்டு பாடவிதானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதும் அது நடைமுறையில் வெற்றியளிக்கவில்லை என்றே கூறவேண்டும். பாடசாலைகளில் வாழ்க்கைத் தேர்ச்சிக்கல்வி சரியான முறையில் வளர்த்தெடுக்கப் படவில்லை என ஏக்கப்படும் கல்விச் சமூகம் ஏனோ தொழில் பயிற்சி வழங்கும் நிறுவனங்களை மறந்து விடுகின்றது.

கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வரும் பாடசாலைகளும்,திறன் விருத்தி வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்பக் கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வரும் தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களும் தம்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கின்றனவே தவிர இரண்டையும் இணைத்து செயற்பட வைப்பதன் மூலம் கூடிய விளைதிறனைப் பெற்றுக்கொள்ள முடியம் எனச் சிந்திப்பவர் யாருமில்லை.

தரம் 1ல் அனுமதி பெறும் மாணவர்களில் ஏறத்தாழ 4% இனரே பல்கலைக் கழகங்களுக்கு தெரிவு செய்யப்படுகின்றனர்.எஞ்சிய 96% மாணவர்களைப் பற்றி கல்வி அமைச்சு அதிக கவனம் செலுத்துதல் வேண்டும்.

தொழினுட்பக் கல்லூரிகளைப் பொறுத்த வரையில் தரம் 3 ஐப் பூர்த்தி செய்யும் மாணவர் தொடக்கம் க.பொ.த உயர்தரம் சித்தியடைந்தவர்கள்வரை அவரவர் தகைமைக்கேற்ற கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வழிவகைகள் காணப்படுதல் சிறப்பம்சமாகும்.

வெளிநாடுகளில் நடைமுறைப்படுத்தப் படுவது போலவே நமது நாட்டிலும் கைத்தொழில் துறை அபிவிருத்திக்கும் பொருளாதாரத்துறை அபிவிருத்திக்கும் பொருந்துமாறு பாடசாலையை விட்டு விலகிச் செல்வோரை வாழ்க்கைத்தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்விப் பயிற்சியில் ஈடுபடுத்துவதற்கான செயற்திட்டங்களில் கல்வி அமைச்சு முக்கிய கவனம் செலுத்துவதுடன் இந்நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட முன் வர வேண்டும்.

தொழிநுட்பக் கல்லூரிகள் மற்றும் பாடசாலைகளை இணைத்துச் செயற்பட வைக்கும் நோக்குடன் திறன் விருத்தி வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்பக் கல்வி அமைச்சினால் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கும் “திறன்விருத்தி உதவியாளர்” (Skills Development Assistant) ஒருவர் வீதம் இத்துறையில் ஏற்கனவே முன்னனுபம் உள்ள பட்டதாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் இவர்கள் தமது பணிகளை திறம்பட முன்னெடுத்துச் செல்லவில்லை என்றே கூறவேண்டும்.
மேலும் தொழினுட்பக் கல்விப்பயிற்சி திணைக்களத்தினால் தொழினுட்பக் கல்லூரிகளில் “தொழில் வழிகாட்டல் ஆலோசகர்கள்” (Carrier Guidance and counseling officers) எனும் பதவி நிலையில் பட்டதாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதன் மூலம் தொழினுட்பக் கல்லூரிகளின் ஊடான விளைதிறனை அதிகரிக்கச் செய்தலே இவர்களின் தலையாய பொறுப்பாகும்.ஆனால் இவர்கள் கூட மாணவர்களை உற்பத்தி செய்யும் பிரதான நிறுவனம் பாடசாலை என்பதை உணர்ந்து செயற்படுவதாகத் தெரியவில்லை.

அத்தோடு அண்மைக் காலங்களில் கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கு “ஆலோசகர்” (Councilor) என்னும் பதவி நிலையில் பட்டதாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.மாணவர்களின் பிரச்சினைகளை இனம் கண்டு தகுந்க ஆலோசனைகளை வழங்குவதுடன் உளநெருக்கீட்டிற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை சேவையை வழங்கி வழிநடத்துதலும் இவர்களின் பிரதான பணியாகும்.இவர்கள் தமது மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்குவதற்கும் முன்வருதல் வேண்டும்.

பாடசாலையை விட்டு இடைவிலகும் மாணவர்களையும் க.பொ.த சா/த மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் போதுமானளவு பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளாத மாணவர்களையும் தொழில்சார் கற்கை நெறிகளுக்கு அறிமுகம் செய்வதன் மூலம் மாணவர்களை நெறிப்படுத்த முடியும் என்பது திண்ணம்.

திறன்விருத்தி உதவியாளர்கள், தொழில் வழிகாட்டல் ஆலோசகர்கள், மற்றும் ஆலோசகர்கள் ஆகிய மூவரும் இணைந்து செயற்படுதன் மூலம் தொழிற்கல்வி மற்றும் தொழிற்பயிற்சிகளில் அதிகளவு மாணவர்களை ஈடுபடுத்தமுடியும் என்பது ஒருபுறம் இருக்க ஆசிரியர்களும் இப்பணியில் தம்மை இணைத்துக்கொள்ள முன்வரவேண்டும்.

மாணவர்களுக்கு கற்பித்தல்,பரீட்சைக்கு தயார்படுத்தல்,அவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் போது மனமகிழ்சியடைதல் என்பவற்றுடன் ஒரு ஆசிரியரின் பணி நிறைவடைந்துவிடுவதில்லை. அதனையும் தாண்டி ஆசிரியர்களின் பணி நீளுதல் வேண்டும் என்பதே ஒட்டுமொத்தக் கல்விச் சமுதாயத்தினதும் எதிர்பார்ப்பாகும்.ஆசிரியர்களும் இதனை உணர்ந்து செயற்பட முன்வரவேண்டும்.

ஒரு பிள்ளையானது தன் பெற்றோர்களுடன் செலவிடும் நேரத்தை விட ஆசிரியர்களுடன் செலவிடும் நேரமே அதிகமாகும்.மாணவர்களுடன் அதிகளவு தொடர்புகளை வைத்திருப்பவர்களும் ஆசிரியர்களே.எனவே ஆசிரியர்கள் மாணவர்களை சிறந்த பெறுபேறுகளை நோக்கி தயார்படுத்துவது மட்டுமின்றி போதியளவு பெறுபேற்றைப் பெற்றுக் கொள்ளாத மாணவர்களையும் வழிப்படுத்தி நெறிப்படுத்தலும் தமது கடமையே என்பதை உணர்ந்து செயற்படல் வேண்டும்.

இலங்கை முழுவதிலும் அமைந்துள்ள தொழினுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் வருடாந்தம் 70,000 மாணவர்கள் பயிற்சி பெறுகிறார்கள்.இம் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் 50,000 இனால் அதிகரிக்கக் கூடிய மனிதவள மற்றும் ஏனைய வளங்கள் இந்நிறுவனங்களில் காணப்படுகின்றது.இந் நிறுவனங்களின் தற்போதைய தேவை மாணவர்களின் தொகையை அதிகரித்தலே.

எனவே ஆசிரியர் சமூகம் தமது மாணவர்களை இந் நிறுவனங்களுடன் இணைத்து,அம்மாணவர்களை தொழிற் பயிற்சிகளை கற்கச் செய்வதன் மூலம் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக இருப்பது மட்டுமன்றி, இம் முயற்சியானது மாணவர் நலனையும் தாண்டி எமது நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் உறுதுணையாக இருக்கும் என்பதை புரிந்து செயற்படல் வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்ட உத்தியோகத்தர்களும் இப்பணியை செவ்வனே நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்ப்பதுடன்,இப்பொறுப்பை ஆசிரியர்களும் எடுத்துக் கொள்வதன் மூலம் இன்னும் சிறந்த பெறுபேறுகளை பெறமுடியும் என்பது எம் எல்லோரினதும் ஒட்டு மொத்த எதிர் பார்ப்பாகும்.


பின்குறிப்பு : இந்த கட்டுரை அகில இலங்கை ரீதியில் தமிழ் ஆசிரியர்களால் வெளியிடப்படும் "அகவிழி" சஞ்சிகையில் December 2007 ல் வெளியாகியது.

Sunday, March 2, 2008

சலனம்

எட்டரைக்கு இன்னும் பதினைந்து நிமிடங்களே இருந்த அவசரத்தில் மோட்டார் சைக்கிளின் வேகத்தை அதிகரித்தேன்.

திங்கட்கிழமைகளில் சீசிக்கு ‘சூறணவன்’ ஏறிவிடும்.

“சனி, ஞாயிறு வீட்ட நிண்டு திண்ட கொழுப்பு” என்ற பீயோன் கந்தசாமியின் திட்டு மறுக்கமுடியாத உண்மை.

மாதத் தொடக்கத்தில் ஒழுங்காய் வந்து ஓவர்ரைம் எல்லாம் கவர் பண்ணிய பிறகு கடமை, கண்ணியம், கட்டுப்பாடெல்லாம் காற்றில் பறந்து விடும். கயிறு எறிந்து தான் மனிசனைப் பிடிக்க வேண்டும்.

ஓவர்ரைம்கவர் பண்ண வருகின்ற நாட்களில் மட்டும் அற்ரெண்டன்ற் ரெயிஸ்ரரில் ஒரே இரத்தக் களரிதான். மீதி நாட்களில் எல்லாம் அற்ரெண்டன்ற் ரெயிஸ்ரர் ‘சிவனே’ என்றிருக்கும். பத்தரைக்கு அலுவலகம் வந்தாலும் கூட 8.31 என்று பயப்படாமல் சைன் பண்ணலாம்.

வெள்ளிக் கிழமை வீட்டுக்கு போகும்போது சம்பளம் கைக்கு வந்துவிட்டது. மாதச் செலவிற்கான பத்தாயிரம் ரூபாவை மனைவியிடம் கொடுத்த பிறகு பொக்கெற் மணியும் பெற்றோல் செலவுமான எனது மீதியில் (அரியஸ் வந்த ஆறாயிரத்தை அமுக்கி விட்டேன்) மனைவிக்கு ஒரு சாறியும் றோயல் காடினில் ஸ்பெசல் ஐஸ்கிறீமும் வாங்கிக் கொடுத்ததன் விளைவாக மூன்று நாட்களாக எனக்கு அடித்தது யோகம். ஹட்ரிக் சாதனை. இரவும் நித்திரை கொள்ள பன்னிரண்டு மணி தாண்டி விட்டது. ஏழரை மணிக்கு திடுக்கிட்டு முழித்தபோது, பக்கத்தில் படுத்து மாடு நித்திரையாய்க் கிடந்தாள். மற்றைய நாட்களில் இந்நேரம் முட்டைப் பொரியலின் வாசம் மெலிதாய் காற்றில் மிதந்து வரும்.

தட்டி எழுப்புவதற்காக கையைக் கொண்டு போனேன்.

‘பாவம் நித்திரை கொள்ளட்டும்’ என்ற எண்ணம் ஏற்பட தலையைத் தடவி “இண்டைக்கு பாண வேண்டுவம்” என்றேன்.

அவள் சந்தோஷத்துடன் திரும்பிப்படுத்தாள்.

கடைக்கு போய் வந்து வெளிக்கிட பதினைந்து நிமிஷம் லேற்றாகிவிட்டது. அரைறாத்தல் பாணும் கப்பல் வாழைப் பழமும் இத்தனை கனம் கனக்கும், என்று எனக்கு இன்றைக்குத்தான் தெரியும். மணிக்கூட்டு கோபுர சந்தியைக் கடக்கும் கணத்தில் புதிய ஸ்கூட்டி பெப்பில் வேகமாக என்னைக் கடந்த அந்த அழகியை (ஆசிரியைகள் மன்னிக்கவும்!) எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.

தோளில் தொங்கிய கான்ட்பாக்கும், பின்சீட்டில் கட்டப்பட்டிருந்த பேப்பர் கட்டும் “ரீச்சர் வாறா வழி விடுங்கோ” என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தன.

‘எங்கயோ கண்ட மாதிரி இருக்குதே’ என்று யோசிக்கத் தொடங்க முன்; ஞாபகத்திற்கு வந்து விட்டாள்.

ஒன்பதாம் வகுப்பில் யாழ் பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் மலர்விழி என்னுடன் படித்த நாட்களில் அவளின் தந்தை சுப்பையா எங்களுடன் படித்த எல்லாப் பெடியளுக்கும் மாமாதான். 1986ஆம் ஆண்டு திருகோணமலையிலிருந்து இடம் பெயர்ந்து வந்து அந்தப் பாடசாலையில் படித்தாள்.

பக்கத்து வளவுக்குள் கஸ்டப்பட்டு எறிந்து விழுத்திய மாங்காயை அவளிடம் கொடுத்து விடுவதில் எங்களிடையே நடக்கும் போட்டி இருக்கிறதே! அதை சொற்களில் வர்ணித்து விட முடியாது.அனேகமான நாட்களில் நான் கொண்டு வரும் மாங்காய்க்குத்தான் அவளிடம் கடி வாங்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.

‘அட இவளா!’ என்ற ஆச்சரியத்துடன் சைட் கண்ணாடியில் முகத்தைப் பார்த்து என் அழகை உறுதிப்படுத்திக் கொண்டேன்;.

ஒன்பதாம் வகுப்பில் அவள் சொல்லாமல் கொள்ளாமல், வேறு பள்ளிக்கூடம் மாறிச் சென்ற போது

“லெவல் பிடிச்சவள்………. போய்த் துலஞ்சாள்” என்று மற்றப் பெட்டையள் சந்தோஷப்பட….. எனக்குள் இனம் புரியாத ஏதோ ஓர் உணர்வு. யாருக்கும் தெரியாமல் கலங்கிய கண்களை துடைத்துத் தனிமையில் அழுதிருக்கிறேன்.

அவளின் முகவரி எழுதிய டையரியும், கொட்டை கொட்டையான எழுத்தில் அவள் எழுதித் தந்த தீபாவளி காட்டும் இன்றும் கூட என் மனைவிக்குத் தெரியாமல் ஒழித்து வைத்திருக்கிறேன்.

A\L படித்தபோது, பல்கலைக்கழகத்தில், தற்போது வேலை செய்யும் அலுவலகத்தில் எத்தனையோ பெண்களைப் பார்த்து….பேசி…. பழகி….. ஆனாலும் ஏனோ அவளை மட்டும் என்னால் மறக்க முடிவதில்லை.

என் மனைவியைப் பெண் பார்க்கப் போனபோது கூட தமிழ் சினிமாப்படம் போல, ‘தேத்தண்ணி கொண்டு வந்து தருபவள் அவளாக இருக்கக்கூடாதா?’ என்ற எண்ணத்துடன் நிமிந்து பார்த்தேன்.

என் மனைவி (அப்போது செல்வி. அமுதினி வேதநாயகம்) குழந்தை முகமாய்ச் சிரித்தாள்;. அவளுக்காய் இவளை புறக்கணித்து காத்திருக்குமளவு பொறுமையில்லாமல் செல்வி வேதநாயகத்திற்கு திருமதி என்ற அந்தஸ்தை வழங்கினேன்.ஒன்றரை வருட திருமண வாழ்க்கையில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்தக் குறையையும் அவள் எனக்கு வைக்கவில்லை.

வவுனியா மகாவித்தியாலய வாசல் ‘U’ வளைவில் மோட்டார் சைக்கிளை பிரேக் போட்டு திருப்பி ஸ்கூட்டி பெப்பை பின் தொடர்ந்தேன்.

‘பின் சில்லு காத்துப் போய்விட்டது’ என்று சோட்லீவு போடும் எண்ணத்துடன் அவளை பின்தொடர்ந்து சென்று பாடசாலையை கண்டு பிடித்த பிறகு அலுவலகம் சென்றேன்.
எனக்கு வேலை ஓடவில்லை. ‘எப்போதடா 12.30 ஆகும்’ என்று காத்திருந்து அரைநாள் லீவு போட்டு பாடசாலைக்கு விரைந்தேன். எனது நல்ல காலம் பாடசாலை ஸ்ராப் மீற்றிங் தொடங்கும் ஆயத்தங்களில் மூழ்கி இருந்தது.

பீயோன் போய் சொன்னதும் என்னை நோக்கி வந்தவள் அடையாளம் காண முடியாமல்
உற்று நோக்கி………………..
ஆச்சரியத்தால் புருவங்களை உயர்த்தி…………………
முகம் நிறைய மலர்ச்சியைக் காட்டினாள்.

‘என்னைத் தெரிகிறதா?’ என்று புதிர் போட்டு விளையாடும் என் எண்ணத்தை

“அட……செல்வகுமார்……… என்னால நம்பேலாமல் கிடக்கு” என்ற அவளின் வார்த்தைகள் கலைத்தன.

“வாங்கோ கன்ரீனுக்க போயிருப்பம்”

‘எப்படி என்னை மறந்திருக்கமுடியும்’ என்ற சிந்தனையோட்டத்துடன் அவளைத் தொடர்ந்து சென்றேன்.

“காசி அண்ண…… சூப்பராய் ரண்டு ரீ போடுங்கோ” என்றவள் என்னை நோக்கி திரும்பி சிரித்தாள்;

ஐந்து வருடங்கள் முன்னே சந்தித்திருந்தால்;

‘ஆளே அடையாளம் தெரியவில்லை’

‘என்ன மாதிரி வளர்ந்து விட்டாய்’

என்றெல்லாம் கதைத்திருக்கலாம். காதருகே இளநரை எட்டிப்பார்த்து சுகம் விசாரிக்கும் வயதில் இது சரி வராது.

“அப்ப ………. எப்பிடி சுகம்?”

“நீங்கள் தான் சொல்ல வேண்டும்”

பத்து நிமிடங்களில் பத்து வருடஷங்களை சுருக்கமாய் பகிர்ந்து கொண்டோம். எனக்கு திருமணமானதை மட்டும் மறைத்து விட்டேன்.

கதைத்துக் கொண்டிருக்கும் போது தனக்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதையும் பதிவுத் திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டிருப்பதையும் தெரிவித்தாள்.

“கட்டாயம் நீங்கள் ………. கலியாண வீட்டுக்கு வரோணும்” என்றாள்.

‘கலியாணத்திற்கு இப்ப என்ன அவசரம்? கொஞ்சக்காலம் பொறுத்து இருந்திருக்கலாம்’ என்று மனதிற்குள் கொதித்தேன்.
நிச்சயம் அவளைக் கட்டாயப்படுத்தித்தான் இந்தக் கலியாணத்திற்கு சம்மதிக்க வைத்திருப்பார்கள். எவ்வளவு காலம் தான் அவளும் என்னைத் தேடி அலைவது? எது எப்படி நடந்தாலும் பரவாயில்லை. அவளுக்கு மறுவாழ்வு கொடுப்பதுதான் எனது முதல் கடமை என்று முடிவெடுத்துக் கொண்டேன்.

அவள் அடிக்கடி தனது கைக்கடிகாரத்தை பார்த்தபடிதான் என்னுடன் கதைத்துக் கொண்டிருந்தாள். பின்பு பொறுமையிழந்தவளாய்…….

“ஸ்கூல் பெல் அடிக்கப் போகுது. சோட்லீவு போட்டுட்டு வெளிக்கிடேக்கத்தான் நீங்கள் வந்தனியள்”
நான் அவளை உற்று நோக்கினேன்.

“உங்களக் கண்டதில சந்தோஷம். இண்டக்கு சாறி எடுக்கப் போறதுக்கு ‘அவற்ற’ வீட்ட வாறனெண்டு சொன்னனான். பார்த்துக் கொண்டிருப்பினம்.”

சண்டாளி சிரித்துக் கொண்டு சொல்ல என் எண்ணமெல்லாம் வெடித்துச் சிதறியது.

“சரி நானும் போட்டு வாறன். பிறகு சந்திப்பம்”

மோட்டார் சைக்கிளை வேகமாகச் செலுத்தினேன். ஏனோ என் மனைவி மீது கோபம் கோபமாக வந்தது. இன்று வெள்ளணவே வீட்டுக்குச் சென்றது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்க வேண்டும். ஆச்சரியத்துடன் என்னை வரவேற்ற அவள் மீது தேவையில்லாமல் எரிந்து விழுந்தேன். பாத்றூமிற்குள் சென்று கதவை அறைந்து சாத்தினேன்.

குளிர்ந்த நீர் உடம்பை நனைக்க நனைக்க கோபம் அடங்கியது. சாப்பாட்டு மேசையில் அமர்ந்தேன்.
-சம்பா அரிசிச் சோறு….
-கோழி இறைச்சிக் கறி….
-மாட்டீரல் பொரியல்……
-கத்தரிக்காய் வெள்ளைக்கறி….

எனக்குப் பிடித்த கொம்பினேசன் சமைக்கப்பட்டிருந்தது.
கிளாசில் வைக்கப்பட்டிருந்த குடிதண்ணீர் சலனமற்று தெளிவாக இருந்தது.

“பெட்றூமுக்கை சரியான வெக்க. பக்கத்து அறேக்க, பாஃனுக்கு கீழ பாயைப் போடு” என்று கண்சிமிட்டிய என் உத்தரவை நிறைவேற்றச் செல்கிறாள் என் மனைவி.

“அதிகம் சலனப் படுபவர்கள் ஆண்களா? பெண்களா?” என்ற சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத் தலைப்பு ஞாபகம் வர, என் உதடுகளின் மெல்லிய புன்னகை மலர்கின்றது.

(யாவும் கற்பனை????)

பின்குறிப்பு : இந்த கதை 09.12.2007 அன்று தினகரன் பத்திரிகையில் வெளியாகியது.