Wednesday, February 20, 2008

கைதிகள் or நகரப் பயணம்


குடிசை வீடு....
குப்பி விளக்கில் படிப்பு...
இடையிடையே வட்டமிட்டு செல்லும் விமானங்கள்...
ஆனாலும் வாழ்க்கை இனித்தது...!

நகரத்துக்கு வந்துவிட்டால் சந்தோசமாம்
நகரத்துக்கும் வந்தாயிற்று....
மாடிக் கட்டிடங்கள்...
பளிச்சிடும் மின்விளக்குகள்...

அத்துடன் புதிதாய்..?

சட்டைப்பையில் அனுமதிப்பத்திரம்...!
திறந்த வெளிக் கைதிகள் நாம்.

பின் குறிப்பு : நான் 1999 இல் வவுனிக்குளத்திலிருந்து (உங்களுக்கு தெரியாமல் இருப்பது நல்லதென்றே எண்ணுகிறேன்) வவுனியாவுக்கு வந்தபோது எழுதிய மிகச்சிறிய கவிதை இது.

இந்த கவிதையை புரிந்து கொள்ள நீங்கள் 2001 க்கு முற்பட்ட காலங்களில் வவுனியா மாநகரத்தில் வசித்திருக்க வேண்டும்...

Friday, February 15, 2008

அறுவடை நாள்


வானம் முழுவதும் மப்பும் மந்தாரமுமாக இருள் மண்டிக் கிடந்தது. உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த கனகலிங்கத்தார் நீண்ட பெருமூச்சொன்றை விட்டபடி எழும்பி இருந்தார்.பக்கத்துப் பாயில் படுத்திருந்த பாக்கியமும் நித்திரையில்லாமல் முழிப்பாகத்தான் கிடந்தாள்.

“பேசாமல் படுத்து நித்திரையைக் கொள்ளப்பா.எல்லாம் தல விதிப்படிதான் நடக்கும். நீ யோசிச்சு வருத்தக் காரனாகப் போறா”

அவர் பதில் ஏதும் சொல்லாமல் தலைமாட்டில் இருந்த தண்ணிச் செம்பை எடுத்துக் கொண்டு முற்றத்திற்குப் போனார்.வாயைக் கொப்பழித்த வாறே வானத்தை அண்ணாந்து பார்த்தார்.அது கரும் இருளாய்ப் பயம் காட்டியது. மருந்துக்குக் கூட நட்சத்திரங்களைக் காண முடியவில்லை.

அந்தக் கரும் இருள் இப்போது இரண்டு பெரும் அசுரர்களாக மாறியது. இரண்டு அசுரர்களும் முட்டி மோதத் தயாராக இருந்தார்கள். அவர்களின் கைகளில் இருக்கும் நீண்ட வாள்கள் ஒன்றையொன்று மோதி தேய்படும் போது உருவாகின்ற நெருப்பே மின்னலென்றும் அவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் சத்தமே இடியென்றும் அவர்களில் தோற்றுப் போனவனின் கண்களிலிருந்து வடியும் கண்ணீரே மழையென்றும் குஞ்சியாச்சி சொன்ன கதை ஞாபகம் வந்தது.

“கடவுளே இந்த அசுரன்கள் சண்ட பிடிக்காமல் சமாதானமாப் போவேணும்”
தன் அறியாமையை எண்ணிய போது உதடுகளில் புன்னகை மலர்ந்தது.

“என்னப்பா சிரிச்சுக் கொண்டு வாறாய்”

“ஒண்டுமில்ல குஞ்சியாச்சி சொன்ன கதை ஒண்டு ஞாபகம் வந்தது”

“சரி..சரி பழங்கதையை துவங்காமல் படுத்து நித்திரயக் கொள்ளப்பா”

கணவனை உரப்பினாலும் அவளின் உள்மனமும் வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டுதானிருந்தது.

“என்ர சிவபுரத்தானே…..இண்டக்கு மழ வராட்டி அஞ்சு கொத்தரிசீல பொங்கிப் படைக்கிறன்”

இரண்டு கரிய நிற உருவங்கள் கனகலிங்கத்தாரை நோக்கி வருகின்றன. தூரத்தில் பார்க்கும் போது அவை மனித உருவங்களாகத் தான் காட்சியளித்தன.ஆனால் கிட்ட வரும்போதுதான் அவை பெரிய இராட்சத உருவங்கள் என்பது தெரிகின்றது. கனகலிங்கத்தார் பயத்தால் எழும்ப முயன்ற போது ஒரு உருவம் தனது கால்களில் ஒன்றை அவரது நெஞ்சில் வைத்து அழுத்துகின்றது.அவரால் மூச்சு விட முடியவில்லை. மெதுவாகத் தலையைத் திருப்பி மற்ற உருவத்தைப் பார்க்கின்றார். அந்;த உருவம் ஒரு கையால் பாக்கியத்தின் கழுத்தை நெரித்தபடி மற்றைய கையை அவரின் பேரப்பிள்ளைகளை நோக்கிக் கொண்டு போகின்றது. கனகலிங்கத்தாருக்கு எங்கிருந்தோ அசுர பலம் வருகின்றது.

“ஐயோ….அதுகள விடு…அதுகள விடு…”

என்று திமிறிக் கொண்டெழும்புகின்றார். உள் அறைக்குள் படுத்திருந்த சியாளினி எழும்பி ஓடி வந்து விறாந்தை லைட்டைப் போடுகின்றாள்.

“என்னப்பா? ஏன் சத்தம் போடுறியள்? கனவேதும் கண்டனியளே?”

குணவனின் சத்தத்தைக் கேட்டுப் பயந்த பாக்கியத்தின் கை கால் எல்லாம் உதறிக் கொண்டிருந்தது.

“என்னப்பா வாயைத் திறந்து சொல்லன்?”

“ஒண்டுமில்ல ஒரு கெட்ட கனவடி.சரியாப் பயந்து போனன்”

“நாசமாப் போறவனே நிம்மதியாப படனடா. மழ வந்து வயல அழிஞ்சா அழிஞ்சு போட்டுப் போகட்டும்…..உந்தத் தெய்வங்களையெல்லாம் கும்பிடுறது வீண்வேலை.ஒரு மனிசனை இப்பிடியே சோதிக்கிறது.”

பாக்கியம் தன் கோபத்தைத் தெய்வங்களின் மீது திருப்பித் திட்டித் தீர்த்தாள்.

“அப்பா சின்னண்ண காசு அனுப்புறனெண்டு சொன்னவனெல்லே. அவன் கட்டாயம் அனுப்புவன். நீங்கள் சுகமாய் இருந்தாத் தானே நாங்கள் சீவிக்கலாம். யோசியாமல் படுங்கோ”

இளையவள் தன் பங்குக்கு புத்திமதி சொல்லி விட்டுப் போனாள். அந்தக் குழந்தைகள் இரண்டும் எதுவுமே அறியாமல் நித்திரையாகக் கிடந்தார்கள்.

மூத்த மகள் பிரார்த்தனாவை முல்லைத்தீவில் ஒரு பெடியனுக்கு கட்டிக் கொடுத்த போது பாக்கியத்திற்கு அவ்வளவு திருப்தியில்லை.மகளை அருகில் வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை அவளுக்கு.

“அடியே அது பொன் விளையுற பூமியடி.விவசாயி எண்டவன் சும்மா லேசுப்பட்ட ஆளில்லை.அவன் மண்ணப் பொன்னா மாத்திறவனடி.அவன் என்ர பிள்ளையை ராசாத்தி மாதிரி வச்சிருப்பன் பாரடி”

திருப்பதி கனகலிங்கத்தாரின் நம்பிக்கையை வீணாக்கவில்லை.தனக்குச் சொந்தமான வயலில் கடுமையாய் உழைத்து பிரார்த்தனாவை செல்வச் செழிப்புடன் தான் வைத்திருந்தான்.

விதியின் விளையாட்டின் முன்னால் அவன் தோற்றுப் போக வேண்டி நேர்ந்தது ஆண்டாணடு காலமாக எத்தனையோ மக்களுக்கு உணவையும் உழைப்பையும் தந்த கடல் அன்னை சீறிப் பாய்ந்ததில் திருப்பதியும் பிரார்த்தனாவும் அடித்துச் செல்லப் பட்டு பிணம் கூடக் கிடைக்கவில்லை.

கிளிநொச்சிப் பெரியாஸ்பத்திரியில் ஒன்றும் வவுனியா பெரியாஸ்பத்திரியில் ஒன்றும் என அவரின் பேரப்பிள்ளைகள் பல நாட்கள் கழித்து அவர்களின் கைகளில் கிடைத்தன.மகளையும் மருமகளையும் அந்தப் பிள்ளைகளின் முகங்களில்தான் கண்டு கொண்டிருக்கிறார்கள்.

வவுனியாவில் கொஞ்ச நாட்களாக யாரை யார் சுடுகிறார்கள் என்று தெரியாமல் தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப் பட்டபோது மூத்த மகனின் பிரேதம் குருமண்காட்டு ரெயில்வே தண்டவாளத்தில் கண்டெடுக்கப் பட்டது.

அடுத்தடுத்து அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்க மனமுடைந்து இனி இந்த நாட்டில் உயிர் பிழைப்பது கஸ்ரம் என்று இந்தியா செல்ல முடிவெடுத்தார்கள். பொருள் பண்டம் காணி பூமி எல்லாவற்றையும் அகப்பட்ட விலைக்கு விற்று விட்டு மன்னார்க் கடலால் இந்தியா சென்ற போது இடையில் நேவியிடம் அகப்பட்டு கரைக்கு இழுத்து வரப் பட்டார்கள்.

“ஒயா ஒக்கம கொட்டித? தமில் னாடு யனவாத?”

என்று விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டது மட்டுமின்றி அவர்கள் தமிழ் நாட்டுக்கு கடத்திச் சென்ற காசு நகையெல்லாம் பறிமுதல் செய்யப்பட்டது. நேவிக்காரர் சுட்டபோது ஒன்றிரண்டு வள்ளங்கள் இந்தியாவிற்கு தப்பிச் சென்றன. அவற்றில் ஒன்றில் அவர்களின் இரண்டாவது மகனும் அகப்பட்டுக் கொண்டான்.

செய்வதறியாது திகைத்து நின்ற கனகலிங்கத்தார் பிறந்த மண்ணே தஞ்சம் என்று புதுக்குளம் வந்து சேர்ந்தார்.போவதற்கு வீடு வாசலுமில்லை. கடவுளை நம்பி சிவன்கோயில் மண்டபத்தில் போய் அமர்ந்து கொண்டார்.

“என்னடி பிள்ள? உள்ளுக்க வா.இனி இந்தக் கோயில்தான் தஞ்சம்”
அவள் தயங்கிக் கொண்டு நின்றாள்.

“என்னடி?கூப்பிட்டா வரமாட்டியே?” ;பளார்’ என்று கன்னத்தில் அறைந்தார்.

“இல்லயப்பா சுகமில்ல.உள்ளுக்க வரக்கூடாது”

“என்ர சிவபுரத்தானே.நீ இன்னும் உள்ளுக்கை இருக்கிறியோ?இல்லாட்டி வெறும் கல்லுத்தானோ?”
ஆனால் அந்த ஊர் மக்கள் இன்னும் மனிதர்களாகத் தான் இருந்தார்கள். கிட்டத்தட்ட அந்தக் கிராமமே திரண்டு வந்து விட்டது.

“என்ன கனகலிங்கம் நீயென்ன பிறத்தியானே? நானொருத்தன் உயிரோட இருக்கிறத மறந்திட்டியே!என்ன வீட்ட வா”-சண்முகம்.

“எடி பாக்கியம் நீயென்ன அனாதையோடி?கூடப் பிறந்தவன் நான் இல்லையோடி?”-செல்லத்துரை.

“சியாளி நீ என்ர வீட்ட வாடி”-சுகன்யா.
இப்படி ஆளாளுக்க கூப்பிட்ட போதும் கனகலிங்கம் அசைந்து கொடுக்கவில்லை.

“இருந்த காணி பூமி இ சாமான் சக்கெட்டெல்லாம் வித்துப் போட்டம்.நகை நட்டுக் காசையெல்லாம் நேவிக்காரன் கொண்டு போட்டான்.இனி நாங்கள் இனி நடுத்தெருவிலதான்”
பாக்கியம் பிரதட்டை செய்தாள்.

“கனகலிங்கம் நீ திமிர் பிடிச்சவன்.ஒருத்தற்ற வீட்டயும் போகமாட்டாய்.வா…வந்து உன்ர வளவுக்க இரு.வீட்டோட கிடக்கிற வயலச் செய்.அரிவு வெட்டேக்க வாடகையையும் குத்தகையையும் தா.இப்ப முதலில வளவுக்க போவம் வா”

வுpதானையார் கூப்பிட்ட போது மறுக்க முடியவில்லை.

வுpதானையார் அவருக்கு மச்சான் முறை. கனகலிங்கத்தாரின் வீட்டுடன் இருந்த இரண்டு ஏக்கர் வயல் இ கோயில் பக்கம் இருந்த ஒரு ஏக்கர் தோட்டக் காணி இ வடக்கு வாய்க்கால் பக்கம் இருந்க நான்கு ஏக்கர் வயல் எல்லாமுமாகச் சேர்த்து ஏழு இலட்சத்திற்கு அவர்தான் வாங்கியிருந்தர்.

“விதானைக்கு பத்து லச்சத்துக்கு மேல லாபம்.சொந்த மச்சான் எண்டும் பாக்காமல் அமுக்கிப் போட்டான்”
என்ற பேச்செல்லாம் அன்றுடன் அடிபட்டுப் போய்விட்டுது.

“கனகு எனக்குச் சரியான வேதினயாக் கிடக்கடா.ஏழு லச்சத்தையும் துலச்சுப் போட்டு வந்து நிக்கிறா.முழுக்காணியையும் திருப்பித் தரேலாது.வேணுமெண்டா வீடு கிடக்கிற நாலு பரப்பையும் எழுதித் தாறன்”
கனகலிங்கத்தாரின் கண்கள் கலங்கி விட்டன.

“வேண்டாம் மச்சான்.நீ இப்பிடிக் கேட்டதே காணும்.மனசில தெம்பில்லாட்டியும் உடம்பில தெம்பிருக்குதடா.வீட்டுக்குப் பின்னால் கிடக்கிற வயல மட்டும் செய்யுறன்.குத்தகய மட்டும் வேண்டாமெண்டு சொல்லக் கூடாது”
அந்த நேரத்திலும் கனகலிங்கத்தாரின் தன்மானம் விதானையாரை மெய்சிலிர்க்க வைத்தது.

ஒன்றிரண்டு நாள் செல்ல மெல்ல மெல்லக் கவலை கரைந்து வயலில் இறங்கி விட்டார். சேறும் சகதியுமாய் இருந்த மண்ணில் கால்கள் புதைந்த போது ஒரு இன்ப ஊற்றுப் பெருக்கெடுத்தது. அப்படியே அந்த மண்ணைக் கைகளால் அள்ளி முகர்ந்து பார்த்துஇகன்னங்களில் பூசிக்கொண்டார்.
ஆறு மாதங்கள் கடுமையாக உழைத்தார்.அந்த உழைப்பு நெல்மணிகளாய் காய்த்து முற்றிப் பாரம் தாங்க முடியாமல் தலை சாய்த்து நின்ற காட்சி அவரது உழைப்புக்கு மரியாதை கொடுக்க அவை தலை சாய்ந்திருப்பது போன்றிருந்தது.

பக்கத்துக் கொமினிக்கேசனுக்கு இளைய மகனிடமிருந்து ரெலிபோன் வருவதும் வழமையாகி விட்டிருந்தது. கடைசியாக ரெலிபோன் எடுத்தபோது தனக்கு சினிமாத் தியேட்டர் ஒன்றில் போஸ்டர் ஒட்டும் வேலை கிடைத்திருப்பதாகவும்இ பின்னேரம் ஆறு மணிக்கு முன்னர் ‘காம்ப்’ இற்கு சென்றுவிடவேண்டும் என்றும் சொல்லியிருந்தான்.

“இஞ்சேரப்பா இந்த முறை நல்ல விளைச்சல்.பூமித்தாய் மனம் வச்சிருக்கிறாள். பொங்கலுக்கு முன்னம் அரிவை வெட்டிப் போடோணும். முத்தத்தில பெரிய பானேல பொங்க வேணும். புக்கஇமோதகம்இவடை எண்டு அயலட்டை எல்லாத்துக்கும் குடுக்கோணும். குழந்தயளுக்கு எங்கட கஸ்டம் விளங்காதெல்லே”

பாக்கியம் தன்னை மறந்து கதைத்து விட்டு எங்கே கணவன் கோபித்துக் கொள்வாரோ என்று பயந்து “குழந்தயளுக்கு எங்கட கஸ்டம் விளங்காதெல்லே”
என்று புத்திசாலித்தனமாய் சேர்த்துக்கொண்டாள்.

“விதானையாற்ற குத்தகைக் காசை முதலில குடுக்கோணும்”

அரிவு வெட்டுஇசூடடிப்பு போன்ற வேலைகளுக்கு ஆட்களைச் சொல்லிவிட்டு பின்னேரம் வீட்டுக்கு வந்த போது கருமுகிற் கூட்டமொன்று மந்தாரம் போட்டது. கொஞ்ச நேரத்தில் கலைந்து விடும் என்றுதான் முதலில் நினைத்தார்.

வர வர இருள் கனத்ததோடு இரவுச் செய்தியின் போது “ இன்று வடக்குக் கிழக்கின் பல பாகங்களிலும் கடுமையாக மழை பெய்யும்” என்றும் அறிவித்தார்கள்.

வானிலை அறிக்கைகளில் கூட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற இடங்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தன.

எமது நாட்டு வானிலை அறிக்கைகள் பெரும்பாலும் எதிர்மாறாக இருப்பது வழக்கம். “இண்டக்கும் இந்தச் செய்தி பிழையா இருக்க வேணும்” என்று கடவுளை வேண்டினார். உழைப்பின் பயன் கைகளுக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தின் விளைவு அது.

அந்த நீண்ட இரவு விடிந்த போது வானம் சற்று வெளித்திருந்தது.

“பாக்கியம் நான் போட்டு வாறன்”

தேநீர் கூடக் குடிக்காமல் வேலை செய்யும் ஆட்களைக் கூட்டிக்கொண்டு வருவதற்காக ஓட்டமும் நடையுமாய்ச் செல்லும் அவரைப் பார்க்க பாக்கியத்தின் கண்கள் குளமாகிவிட்டன.

“மனிசன்ர உழைப்பு ஒருநாளும் வீணாகாது” என்று பாக்கியத்திற்கு ஏற்பட்ட நம்பிக்கையைப் பொய்யாக்குவது போல முதலாவது மழைத்துளி அவளது உச்சந் தலையில் பாறாங்கல்லாய் விழுந்தது.

கனகலிங்கத்தார் திரும்பி வந்த போது பொங்குகின்ற முற்றம் வெள்ளக் காடாய்க் கிடந்தது.




பின்குறிப்பு : இந்த கதை 13.01.2008 அன்று தினக்குரல் பத்திரிகையில் வெளியாகியது.

என்னைப் பற்றி


காலை எழுந்தது முதல் இரவில் படுக்கைக்கு செல்லும் வரை கழுத்தை நெருக்கும் வேலைப் பளுக்களுக்கும் பொறுப்புக்களும் இடையே தமிழை மறந்து விடாது ஏதாவது கிறுக்கி விட வேண்டுமென துடிக்கின்ற ஒருவன்.....


நான் கிறுக்கத் தொடங்கி காலங்கள் கடந்து விட்டன. என் கிறுக்கல்களில் பல பாராட்டையும் பெற்றுவிட்டன. பல பத்திரிகைகளிலும் வந்துவிட்டன. ஆனாலும் நான் சிந்திக்கிறேன்...... இது போதுமா??? என் படைப்புகள் அனைவரையும் சென்றடைகின்றனவா? எனக்கு வெளிப்படையாகவே தெரிகிறது. நிச்சயமாக இல்லை. எனவேதான் நானும் இந்த வழியில் நுழைவதென முடிவெடுத்தேன்.இதோ நுழைந்தும் விட்டேன்.....


நான் இங்கு புதியவன்.ஆனாலும் எனக்கு தெரியும்.தமிழுலகம் எப்போதுமே படைப்பாளிகளை கைவிடுவதில்லை. நான் என்றுமே உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லயோ உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள். நிறைகளை விட குறைகளை விரும்புபவன் நான்.என்னைச் செதுக்க அவற்றால் தான் முடியும்......


இன்று முதல் வலைப்பூக்களில் தங்கள் படைப்புக்களை தூவும் ஆயிரக்கணக்கான கலைஞர்களில் நானும் ஒருவன்.....


நன்றிகள்